திருச்சி மாவட்டம் மருதூர் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்பவரின் மகன் பிரகாஷ் (30). கூலித் தொழிலாளியான இவர், இன்று சமயபுரம் நால்ரோடு பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடைக்கு மது வாங்குவதற்காகச் சென்றுள்ளார். அப்போது மதுபானக் கடையில் இருந்த கூட்ட நெரிசலில் வரிசையில் நின்றபோது, பிரகாஷிற்கும் அங்கிருந்த சிலருக்கும் இடையே திடீரென வாய்வார்த்தை தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தத் தகராறு ஒரு கட்டத்திற்கு மேல் முற்றி கைகலப்பாக மாறியது.
இந்த தகராறின் போது, கூட்டத்தில் இருந்த மர்ம நபர் ஒருவர் திடீரென தான் வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தால் பிரகாஷின் கழுத்தை அறுத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். கழுத்தில் பலத்த வெட்டுக் காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த பிரகாஷ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மதுபானக் கடை அருகே பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் அங்கு நின்றிருந்த பொதுமக்கள் மற்றும் மதுப்பிரியர்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சமயபுரம் காவல் நிலைய போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உயிரிழந்த பிரகாஷின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இக்கொலை சம்பவம் தொடர்பாக சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுபானக் கடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த அசம்பாவிதம் நடந்ததா அல்லது முன்விரோதம் ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. தப்பியோடிய மர்ம நபரை பிடிக்க அப்பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.