Chengalpattu Veera Muthukrishnan Murder 
க்ரைம்

“பெட்ரோல் பங்கில் வெட்டிக் கொல்லப்பட்ட ரவுடி” - நீதிமன்றத்தில் இருந்து பின்தொடர்ந்த கும்பல்.. 6 மாதம் காத்திருந்து திட்டமா?

ஆகாஷ் என்பவர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் ஏரியில் புதைக்கப்பட்டது...

Mahalakshmi Somasundaram

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்தவர் வீரா என்கிற 26 வயதுடைய வீரமுத்துகிருஷ்ணன். இவர் நேற்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக ஆஜராகிவிட்டு, பின்னர் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது வீரமுத்துகிருஷ்ணன், செங்கல்பட்டு பைபாஸ் பழவேலி பகுதியில் சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்க்கில் தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பிக் கொண்டிருந்தார். அதே நேரத்தில் அங்கு இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் திடீரென வீரமுத்துகிருஷ்ணனை சுற்றிவளைத்ததாக கூறப்படுகிறது.

பின்னர் அந்த கும்பல் அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த வீரமுத்துகிருஷ்ணன் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சிங்கப்பெருமாள் கோவில் அருகே ஆகாஷ் என்பவர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் ஏரியில் புதைக்கப்பட்டது. இந்த கொலை வழக்கில் வீரமுத்து கிருஷ்ணன் முக்கிய குற்றவாளியாக இருந்ததாக சொல்லபடுகிறது. இதனால் முத்து கிருஷ்ணன் தரப்பினருக்கும் ஆகாஷ் தரப்பினருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்ட வந்துள்ளது. இதன் காரணமாக ஏற்பட்ட முன்விரோதத்தில் பழிதீர்க்கும் நோக்கில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Petrol Bunk Murder Chengalpattu

எனவே வீரமுத்து கிருஷ்ணனை கொலை செய்ய திட்டமிட்ட மர்மகும்பல், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு வெளியே வந்தது முதல் பின்தொடர்ந்து வந்ததாகவும், பழவேலி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் வைத்து கொலை செய்ததாகவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வீரமுத்துகிருஷ்ணனுடன் வந்த இருவரை பிடித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் தப்பியோடிய மர்மகும்பல் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெட்ரோல் பங்க்கில் வைத்து இளைஞர் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்