Chennai Ramapuram MTC Driver Death 
க்ரைம்

“விநாயகர் ஊர்வலம் முடிந்த சில மணி நேரத்தில் பயங்கரம்” - . MTC ஓட்டுநரை தாக்கி கொன்ற கும்பல்.. விழா மூடிவதற்குள் கேட்ட அலறல்!

மார்பில் வேகமாக தாக்கியதில் சீனிவாசன் நிலைதடுமாறி சுயநினைவின்றி கீழே விழுந்துள்ளார்...

Mahalakshmi Somasundaram

சென்னை ராமாபுரம் வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற ஊர்வலத்தின்போது ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து, MTC பேருந்து ஓட்டுநர் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமாபுரம் வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் உள்ள அருள்மிகு ராஜ கணபதி ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று இரவு சுமார் 11 மணியளவில் விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலம் வெங்கடேஸ்வரா நகர் 13-வது தெருவில் சென்றபோது, இரவு சுமார் 11.30 மணியளவில் பாதி தூரம் சென்றுவிட்டு, விநாயகர் சிலையை மற்றொரு தெருவிற்கு கொண்டு செல்வதற்காக ஊர்வலத்தினர் திரும்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது, அதே தெருவில் வசித்து வந்த சிலர் விநாயகர் தேரை தங்கள் தெருவில் கொண்டு வருமாறு கேட்டதாக தெரிகிறது. இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்ததனர். இதன் பின்னர், நள்ளிரவில் அதே பகுதியில் உள்ள 2-வது பிரதான சாலையில் வசிக்கும் அனீஸ் என்பவரது வீட்டிற்கு புவனேஷ் மற்றும் அவரது நண்பர்கள் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு சிலரை கீழே வருமாறு அழைத்து, அவர்களை கையால் தாக்கியதாக தெரிகிறது.

அப்போது ஆனந்த் என்பவர், MTC ஓட்டுநரான சீனிவாசன் (44) என்பவரின் மார்பில் வேகமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சீனிவாசன் நிலைதடுமாறி சுயநினைவின்றி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து சீனிவாசனை உடனடியாக இருசக்கர வாகனத்தில் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு முதலுதவி மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக கே.கே. நகரில் உள்ள ESI மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சீனிவாசன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ராமாபுரம் போலீசார் சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையின் அடிப்படையில் 5 பேரை கைது செய்த போலீசார், சம்பவத்திற்கான காரணம் மற்றும் தாக்குதலில் தொடர்புடையவர்கள் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விநாயகர் ஊர்வலத்தையொட்டி ஏற்பட்டதாக கூறப்படும் தகராறைத் தொடர்ந்து MTC ஓட்டுநர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் ராமாபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்