க்ரைம்

“அரை நிர்வாணத்துடன் சடலமாக கிடந்த பெயிண்டர்” - தீபாவளி அன்று நடந்த பார்ட்டி.. மனைவிக்கு வந்த போன் கால்!

மனைவி மகாலட்சுமி அவரது உறவினர்களுடன் கணவனை தேடி வந்த நிலையில் இன்று காலை...

Mahalakshmi Somasundaram

காஞ்சிபுரம்  அடுத்த களக்காட்டூர் கிராமம் கீழாடை தெரு பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவரது மகன் 25 வயதுடைய கண்ணன். இவர் அதே பகுதியில் பெயிண்டர் வேலை செய்து வந்த நிலையில் பக்கத்துக்கு கிராமத்தை சேர்ந்த மகாலட்சுமி என்ற பெண்ணுடன் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது மகாலட்சுமி கண்ணன் தம்பதிக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில் கண்ணன் மனைவி மற்றும் குழந்தையுடன் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார்.

இந்தநிலையில் தீபாவளி பண்டிகையான நேற்றைய முன்தினம் மதிய நேரத்தில் மது அருந்துவதற்காக களக்காட்டூரில் இருந்து தனது இருசக்கர வாகனம் மூலம் தூசி பகுதியில் உள்ள பழைய ஒயின் ஷாப்பிற்கு கண்ணன் தனது நண்பர்களை அழைத்து கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் அவரது நண்பர் அன்று மாலை சுமார் 3 மணி அளவில் மகாலட்சுமிக்கு போன் செய்து, உங்களுடைய கணவர் கண்ணன் அதீத மது போதையில் உள்ளதாகவும், எழுப்பினால் கூட அவர் எழவில்லை என கூறியிருக்கின்றனர். .மேலும் நேற்று வரையில் கண்ணனும் வீடு திரும்பாமல் இருந்துள்ளார்.

இதனால் பதறிப்போன அவரது மனைவி மகாலட்சுமி அவரது உறவினர்களுடன் கணவனை தேடி வந்த நிலையில் இன்று காலை பழைய ஒயின் ஷாப் அருகில் உள்ள பகுதியில் வாலிபர் ஒருவர் முகம்,கழுத்து, வயிறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெட்டுக் காயங்களுடன் கொலை செய்யப்பட்டு அரை நிர்வாண கோலத்தில் சடலமாக இருப்பதாக பொதுமக்கள் சிலர் தூசி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற தூசி காவலர்கள் சடலத்தை கைப்பற்றி மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடப்பது களக்காட்டூர் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என தெரிய வந்ததை அடுத்து இதுகுறித்து தூசி காவல் துறையினர் கண்ணனின் மனைவி மகாலட்சுமிக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தனர். மேலும் கொலைச் செய்யப்பட்ட கண்ணனின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த தூசி காவல் துறையினர் கண்ணன் கொலை செய்யப்பட்டதற்கு மது போதையில் ஏற்பட்ட தகராறு காரணமா ? அல்லது ஏதேனும் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் கொலையுண்ட கண்ணனின் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் ஏராளமானோர் தூசி காவல் நிலையத்தில் குவிந்ததால் அங்கு சற்று பரபரப்பும் ஏற்பட்டது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.