கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் நெடுங்கண்டம் பகுதியில், தனது தாய் மற்றும் தம்பியை அடித்துக் கொன்றுவிட்டு உடல்களை வீட்டின் அருகிலேயே புதைத்து வைத்த 45 வயது நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். பொன்னூட்டில் என்ற குடும்பத்தில் வழக்கமாக நடக்கும் காரியங்களில் மாற்றம் இருப்பதை கவனித்த ஆட்டோ டிரைவர் ஒருவர், அந்த குடும்பத்தின் மகளுக்கு தகவல் கொடுத்ததை அடுத்து இந்த கொடூரக் கொலைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. சஜி (45) என்ற அந்த நபர், குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த தனது தம்பி ரெஜியுடன் ஏற்பட்ட தகராறில் அவரைத் துண்டால் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார்.
தம்பியைக் கொலை செய்ததை நேரில் பார்த்த காரணத்திற்காக, தனது தாய் மேரிக்குட்டியையும் சஜி கொடூரமாகக் கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். தாயின் முகத்தில் பலமுறை தாக்கி அவரை மூச்சுத்திணறச் செய்து சஜி கொன்றுள்ளார். இந்த கொலைகளைச் செய்துவிட்டு இரண்டு நாட்கள் உடல்களை வீட்டிற்குள்ளேயே மறைத்து வைத்திருந்த அவர், பின்னர் அங்கேயே புதைத்துள்ளார். இந்தச் செயலில் அவருக்கு வேறு யாரும் உதவியாக இருக்கவில்லை என்றும், அவர் ஒருவரே அனைத்தையும் செய்துள்ளதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட குடும்பச் சொத்தைப் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறுதான் இந்த கொலைகளுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. சொத்து முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க சஜி விரும்பியுள்ளார். மேலும், தான் திருமணம் செய்துகொள்ள எடுக்கும் முயற்சிகளுக்கு தனது தம்பி தடையாக இருப்பதாக அவர் கருதியுள்ளார். இது தவிர, தம்பி ரெஜி தனது பிறப்பு குறித்து கேலி செய்ததும் சஜியின் ஆத்திரத்தைத் தூண்டியுள்ளது. கொலைகளுக்குப் பிறகு, தாய் மற்றும் தம்பி எங்கே என்று கேட்ட உறவினர்களிடம் அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்து வந்துள்ளார்.
மேரிக்குட்டியை வழக்கமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் ஆட்டோ டிரைவர், சஜியின் நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்டு அவரது சகோதரி சினிக்குத் தகவல் கொடுத்துள்ளார். சினி அளித்த புகாரின் பேரில் போலீசார் வீட்டிற்கு வந்தபோது சஜி அங்கிருந்து தப்பியோடியுள்ளார். போலீசார் நடத்திய சோதனையில் வீட்டின் அருகே புதைக்கப்பட்ட இரண்டு உடல்களும் மீட்கப்பட்டன. கடந்த 2018-ஆம் ஆண்டு சஜியின் தந்தை மேத்யூ மாயமான வழக்கையும் தற்போது போலீசார் மீண்டும் கையில் எடுத்துள்ளனர். தந்தை காணாமல் போனதற்கும் இந்த கொலைகளுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்