Dindigul Sexual Assault Case 
க்ரைம்

“வீடு முழுவதும் இருந்த ரத்தம்” - அதிகாலையில் ஓடிய வாலிபர்.. தனியாக இருந்த 70 வயது மூதாட்டிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை!

திருமணமாகி மனைவியும் ஒரு மகனும் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது...

Mahalakshmi Somasundaram

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே வீட்டில் தனியாக வசித்து வந்த 70 வயது மூதாட்டியை தாக்கி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் இளைஞரை, கிராம மக்கள் விரட்டிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அய்யலூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி, தனது தோட்டத்தில் தனியாக தங்கி விவசாயப் பணிகளை மேற்கொண்டு வருவதுடன், கால்நடைகளையும் வளர்த்து வந்துள்ளார். அவரது மகன்கள் வெளியூரில் வசித்து வருவதால், தோட்டத்தில் உள்ள வீட்டில் மூதாட்டி தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சம்பவத்தன்று வீட்டில் மூதாட்டி தனியாக இருப்பதை அறிந்த இளைஞர் ஒருவர், அவரது வீட்டிற்குள் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்துள்ளார். பின்னர் வீட்டின் கதவை மூடிய அந்த இளைஞர், மூதாட்டியை தாக்கியதுடன், அவரது வாயில் துணியை வைத்து அடைத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது விடியற்காலை மூதாட்டியின் தோட்டத்திற்கு பால் கறப்பதற்காக வந்த பால்காரர் மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு வீட்டு கதவை தட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்த இளைஞர், உடனடியாக வீட்டில் இருந்து வெளியேறி தப்பிச் சென்றதாக தெரிகிறது.

இதனை கவனித்த அப்பகுதி மக்கள், அந்த இளைஞரை விரட்டிச் சென்று பிடித்து, கட்டி வைத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, தாக்குதலில் காயமடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த மூதாட்டியை அப்பகுதி மக்கள் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மூதாட்டிக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த வடமதுரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பொதுமக்களால் பிடித்து வைக்கப்பட்டிருந்த இளைஞரை மீட்ட போலீசார், அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அந்த நபர் அய்யலூர் அருகே உள்ள பாலம் பூசாரியூர் பகுதியைச் சேர்ந்த தேங்காய் வெட்டும் தொழிலாளியான 27 வயதுடைய பால்சாமி என்பது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், பால்சாமி வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி என்பதும், அவருக்கு திருமணமாகி மனைவியும் ஒரு மகனும் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து பால்சாமியை வடமதுரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார், சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூதாட்டியின் புகார், மருத்துவ அறிக்கை உள்ளிட்ட ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். வீட்டில் தனியாக இருந்த 70 வயது மூதாட்டியிடம் இளைஞர் ஒருவர் அத்துமீறியதாக கூறப்படும் சம்பவமும், அவரை பொதுமக்கள் விரட்டிப் பிடித்த சம்பவமும் அய்யலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்