திண்டுக்கல் மாவட்டம், பாலகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயசீலன். இவர் நிலக்கோட்டையில் சர்வேயராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த காளீஸ்வரி என்ற பெண்ணுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளனர். கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே, காளீஸ்வரி தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் திண்டுக்கல் அருகே உள்ள பாலகிருஷ்ணாபுரம் பாப்புலர் நகர் பகுதியில் தனியாக வீடு வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 11ஆம் தேதி மாலை காளீஸ்வரி வீட்டில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு, வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, காளீஸ்வரி கொலை செய்யப்பட்ட வீட்டின் அருகே பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, காளீஸ்வரி வீட்டில் இருந்து கடைசியாக அவரது கணவர் ஜெயசீலன் வெளியே சென்றது தெரியவந்ததாக கூறப்படுகிறது.
மேலும், அதே சமயத்தில் ஜெயசீலன் பயன்படுத்தி வந்த செல்போன் எண், திண்டுக்கல்-திருச்சி சாலையில் உள்ள அய்யலூர் பகுதியில் கடைசியாக செயல்பட்டு வந்ததும், அதன் செய்யப்பட்டதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. எனவே திண்டுக்கல் தாலுகா போலீசார், சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் ஜெயசீலனின் செல்போன் தொடர்புகள் மற்றும் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்ட போது பதிவான டவர் லொகேஷன் உள்ளிட்ட தகவல்களை தீவிரமாக ஆய்வு செய்தனர்.
இதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில், ஜெயசீலன் பாலகிருஷ்ணாபுரம் பாப்புலர் நகர் பகுதியில் பதுங்கியிருப்பது கண்டறியப்பட்டது. செல்போன் சிக்னல் மூலம் அவர் பதுங்கியிருந்த இடத்தை உறுதி செய்த போலீசார், நேற்று மாலை ஜெயசீலனை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து, காளீஸ்வரி கொலை தொடர்பாக ஜெயசீலனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜெயசீலனை நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் பின்னணியில் காளீஸ்வரி கொலை செய்யப்பட்டாரா, கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்