க்ரைம்

தர்மபுரி அருகே யானை தந்தங்கள் கடத்தல்.... 25 கிலோ தந்தங்களுடன் 3 பேர் கைது...

தர்மபுரி அருகே 25 கிலோ எடை கொண்ட யானை தந்தங்களை கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Malaimurasu Seithigal TV

தருமபுரி அருகே யானை தந்தங்களை கடத்தி விற்க முயற்சி செய்த மூன்று பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 25 கிலோ எடை கொண்ட இரண்டு யானை தந்தங்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு கார், ஒரு பைக்கை  பறிமுதல் செய்தனர். 

மேலும் கடத்தலுக்கு உதவி தப்பி ஓடிய 2பேரை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஏரியூர் பகுதியில் சட்டத்துக்குப் புறம்பாக யானை தந்தங்கள் கடத்த இருப்பதாக தென் மண்டல இயக்குனர் வன உயிரின குற்ற தடுப்பு பிரிவுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாகவே ரகசிய தகவல் கிடைத்தன. 

வனத்துறையினர் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதி ஒட்டியுள்ள கிராமங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  இன்று பென்னாகரம் அடுத்த பவளந்தூர் கிராமத்தை சேர்ந்த  சின்னசாமி மற்றும் ஒகேனக்கல் பிலிகுண்டு பகுதியை சேர்ந்த வினோத், ஏரியூர் அடுத்த நெருப்பூர் கார்த்திக் ஆகிய மூன்று பேரும் பென்னாகரம் வழியாக , கார் மூலம்  தருமபுரியை நோக்கி வந்துகொண்டிருந்தனர்.

இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட சேட்டு மற்றும் சக்திவேல் ஆகியோர் பைக்கில் காருக்கு பாதுகாப்பாக வந்துகொண்டிருந்தனர். அப்போது தர்மபுரி மாவட்ட வனத்துறை அதிகாரி அருண் தலைமையில் 8 பேர் கொண்ட குழு தர்மபுரி அடுத்த சோகத்தூர் நான்கு ரோடு சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக வேகமாக வந்த சந்தேகத்திற்கிடமாக வந்த காரை தடுத்து நிறுத்தினர்.

அப்போது காருக்கு பாதுகாப்பாக வந்த இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் சேட்டு மற்றும் சக்திவேல் அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.  பிடிபட்ட காரை சோதனை செய்தபோது சுமார் 25 கிலோ 400 கிராம் எடை கொண்ட 25 வயது மதிக்கத்தக்க யானையின் தந்தங்களை விற்பனைக்காக எடுத்துச் சென்றது தெரிய வந்தது. 

அவர்களிடமிருந்து யானைத் தந்தங்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், பைக் பறிமுதல்  செய்தனர். பிறகு அவர்களை தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்து பின்பு அவர்களை சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய 2 பேரை வனத்துறையினர் தேடிவருகின்றனர்.