அமெரிக்காவில் இளம் பெண்களையும் சிறுமிகளையும் கடத்தி, அவர்களைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைதானவர் கோடீஸ்வரர் ஜெஃப்ரி எப்ஸ்டீன். உலகையே உலுக்கிய இந்தச் சிறுமிகள் கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் கைதாகி சிறையில் இருந்தபோது, கடந்த 2019-ஆம் ஆண்டு அவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். தற்போது அவர் சிறையில் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக எழுதிய ரகசிய உயில் தொடர்பான தகவல்கள் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ளன. சுமார் 600 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் ஏறத்தாழ 5,000 கோடி ரூபாய் மதிப்புள்ள தனது பிரம்மாண்ட சொத்துக்களைத் தனது காதலியான கரினா ஷுலியாக் என்பவருக்கு அவர் உயில் எழுதி வைத்துள்ளார் என்பது நீதிமன்ற ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த பல் மருத்துவரான கரினா ஷுலியாக், எப்ஸ்டீனின் மிக நெருக்கமான தோழியாகவும் காதலியாகவும் இருந்துள்ளார். எப்ஸ்டீன் சிறையில் தற்கொலை செய்துகொள்வதற்குச் சற்று நேரத்திற்கு முன்னதாக கடைசியாகத் தொலைபேசியில் பேசிய நபரும் இவர்தான் என்று கூறப்படுகிறது. உயிலின்படி, கரினாவிற்கு மட்டும் சுமார் 100 மில்லியன் டாலர் ரொக்கப் பணத்தை எப்ஸ்டீன் ஒதுக்கியுள்ளார். அத்துடன் அவரது வாழ்நாள் செலவுகளுக்காக மேலும் 50 மில்லியன் டாலர் மதிப்பிலான நிதி ஏற்பாடுகளையும் அவர் செய்துள்ளார். ஒரு சாதாரண மருத்துவப் படிப்பு படிப்பதற்காக அமெரிக்கா வந்த கரினாவிற்கு, இவ்வளவு பெரிய தொகையை எப்ஸ்டீன் வாரி வழங்கியது பலரது புருவங்களை உயர்த்தியுள்ளது.
சொத்துக்கள் மற்றும் ரொக்கப் பணம் தவிர, விலையுயர்ந்த நகைகளையும் கரினாவிற்குப் பரிசாக அளிக்க எப்ஸ்டீன் திட்டமிட்டிருந்தார். குறிப்பாக 33 கேரட் வைரம் பதிக்கப்பட்ட ஒரு பிரம்மாண்ட மோதிரத்தை அவருக்கு வழங்க வேண்டும் என்று உயிலில் குறிப்பிட்டுள்ளார். அந்த மோதிரம் ஒரு திருமண நிச்சயதார்த்தத்திற்காகத் தயார் செய்யப்பட்டது என்றும், சிறுமிகள் கடத்தல் புகாரில் சிக்கிச் சிறைக்குச் செல்வதற்கு முன்பாகவே கரினாவைத் திருமணம் செய்துகொள்ள எப்ஸ்டீன் திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் நியூ மெக்ஸிகோவில் உள்ள பண்ணை வீடு மற்றும் பாரிஸ் நகரில் உள்ள சொகுசு இல்லம் ஆகியவற்றையும் கரினாவிற்கே எப்ஸ்டீன் விட்டுச் சென்றுள்ளார்.
இருப்பினும், இந்தச் சொத்துக்கள் அனைத்தும் அப்படியே கரினாவிற்குச் சென்று சேருவதில் சட்டச் சிக்கல்கள் நீடிக்கின்றன. எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பெண்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், அவரது சொத்துக்கள் அனைத்தும் தற்போது நீதிமன்றக் கட்டுப்பாட்டில் உள்ளன. எப்ஸ்டீனின் சொத்துக்களை விற்று, அதில் வரும் வருமானத்தைக் கொண்டு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இதுவரை 121 மில்லியன் டாலர் வழங்கப்பட்டுள்ளது. எஞ்சியிருக்கும் சொத்துக்களில் வரி பாக்கி மற்றும் இதர சட்டச் செலவுகள் போக, ஒரு குறிப்பிட்ட தொகை மட்டுமே எஞ்சியுள்ளதால், உயிலில் குறிப்பிட்டபடி முழுப் பணமும் பயனாளர்களுக்குக் கிடைப்பது கடினம் என்றே கருதப்படுகிறது.
எப்ஸ்டீனின் உயிலில் கரினா தவிர மேலும் பல முக்கிய நபர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. அவரது வழக்கறிஞருக்கு 50 மில்லியன் டாலரும், கணக்காளருக்கு 25 மில்லியன் டாலரும் வழங்க அவர் பரிந்துரைத்துள்ளார். சிறுமிகள் கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை புகார்கள் நிரூபிக்கப்பட்ட நிலையில், இவ்வளவு பெரிய தொகையைத் தனது கூட்டாளிகளுக்கு அவர் பிரித்துக் கொடுத்தது சமூக ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்தச் சொத்துக்கள் மீதான சட்டப் போராட்டங்கள் அமெரிக்க நீதிமன்றங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எப்ஸ்டீன் மறைந்தாலும், அவர் விட்டுச் சென்ற பாலியல் குற்றங்களின் நிழலும், இந்த மர்மமான சொத்துப் பகிர்வும் தொடர்ந்து விவாதப்பொருளாகவே இருந்து வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.