ஈரோடு மாவட்டம், பாரதி நகர் 3-வது வீதியைச் சேர்ந்தவர் வினோதினி (24). இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், இவருக்கும் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள சாயல்குடியைச் சேர்ந்த நவீன் (எ) நவநீதகிருஷ்ணன் என்ற பட்டதாரி வாலிபருக்கும் இன்ஸ்டாகிராம் மூலமாகப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் கணவர் வினோதினியை அவரது தாயார் வீட்டிற்கு அனுப்பியுள்ளார். வினோதினியின் தாய் விசாரித்தபோது, "வேறொரு ஆணுடன் வினோதினி பேசிவருகிறார்" என்று தெரியவந்துள்ளது. முதலில் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார் வினோதினியின் தாய். அதன்பின்னர் கணவன் மனைவிக்கும் இடையே எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருந்துள்ளது.
ஆனால், நவீன் வினோதினியின் கணவருக்கு வினோதினியும் நவீனும் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை அனுப்பியுள்ளார். இதனால், மீண்டும் கணவன் மனைவிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால், வினோதினியை மீண்டும் அவரது தாயார் வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளார் வினோதினியின் கணவர். கணவரைப் பிரிந்து தாயாருடன் ஈரோட்டில் வசித்து வந்த வினோதினி, நவீனுடன் தொடர்ந்து தொலைபேசி வழியே தொடர்பில் இருந்து வந்துள்ளார். மேலும், கடந்த 1 வருடமாக தம்பதியினருக்கு இடையே எந்த ஒரு பேச்சுவார்த்தையும் இல்லாமல் இருந்துள்ளது.
பின்னர், வினோதினி நவீனுடன் கடந்த சில நாட்களாக பேசுவதை குறைத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நவீன் ஜூலை 28 அன்று இரவு வினோதினியின் வீட்டிற்கு வந்து, "முன்பு போல என்னிடம் ஏன் அதிகம் பேசுவதில்லை?" எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்குமிடையே தகராறு முற்றிய முற்றியுள்ளது. ஆத்திரமடைந்த நவீன் வீட்டில் இருந்த மண்ணெண்ணெய்யை வினோதினி மீது ஊற்றித் தீவைத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். அந்த சமயத்தில் வீட்டிற்குள் சமைத்து கொண்டிருந்த வினோதினியின் தாய் பேரன் அழும் சத்தத்தினை கேட்டு வெளியே வந்துள்ளார். அப்போது தீப்பற்றிய நிலையில், வினோதினி இருந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வினோதினியின் தாய் அவரிடம் இது பற்றி கேட்டுள்ளார். தன்னை நவீன்தான் இவ்வாறு செய்ததாகவும் தன் மகனுடன் வாழ ஆசைப்பட்டதாகவும் அவரது தாயிடம் கூறியுள்ளார். மேலும், "அவனை விடாதீங்க அம்மா. என் பையனை பார்த்துக்கோங்க. அவ்ளோதான் என் வாழ்க்கை முடிஞ்சி போச்சு" என்று இறுதியாக பேசியதாக வினோதினியின் தாய் கூறியுள்ளார்.
இதனையடுத்து பலத்த தீக்காயமடைந்த வினோதினி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவத்தின் போது தீக்காயமடைந்த குற்றவாளி நவீன், கரூர் அமராவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள ஈரோடு தாலுகா காவல் நிலைய ஆய்வாளர், கரூருக்கு விரைந்து சென்று கரூரில் சிகிச்சையில் உள்ள நவீனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.