க்ரைம்

மகளை கடத்திய தந்தை கைது..!!

Malaimurasu Seithigal TV

தென்காசி அருகே பெற்ற மகளை கடத்தியதாக 3 மாதமாக தேடப்பட்டுவந்த கிருத்திகாவின் தந்தை நவீன் படேலை தனிப்படை போலீசார் கைது  செய்துள்ளனர்.

தென்காசி மாவட்டம், குற்றாலம் அருகே உள்ள கொட்டாகுளம் பகுதியை சேர்ந்த மர அரவை ஆலை அதிபர் நவீன் படேல். இவரது மகள் கிருத்திகா அதேபகுதியில் உள்ள வேறு சமூகத்தை சேர்ந்த வினித் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இந்நிலையில் கிருத்திகாவின் தாய் தர்மீதா படேல் தந்தை நவீன் படேல் உள்ளிட்ட 10 பேர் வினித் கண் முன்னே கிருத்திகாவை காரில் கடத்தி சென்றுள்ளனர். இதையடுத்து தனது மனைவியை அவரது தந்தை கடத்திவிட்டதாக வினித் குற்றாலம் காவல்துறையில் புகார் அளித்தார்.

இச்சம்பவம் குறித்து குற்றாலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதனால் கிருத்திகாவின் தந்தை மற்றும் குடும்பத்தினர் தலைமறைவானார்கள். இந்த நிலையில் கிருத்திகா மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தார் அப்போது அவருக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு அவரது உறவினர்களிடம் செல்லும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் கடந்த மூன்று மாதங்களாக கிருத்திகாவின் தந்தை நவீன் பட்டேல் தாய் தர்மிதா பட்டேல் உள்ளிட்டோரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் தனிப்படை போலீசார் கிருத்திகாவின் தந்தை நவீன் பட்டேலை குஜராத்தில் வைத்து கைது செய்துள்ளனர். மேலும் அவருடன் கிருத்திகாவும் இருந்ததால் நவீன் பட்டேலுடன் கிருத்திகாவையும் தனிப்படை போலீசார் அழைத்து வருகின்றனர். இருவரையும் திருவனந்தபுரம் அழைத்து வந்து அங்கிருந்து மதுரை உயர் நீதிமன்ற கிளையில் ஆஜர்படுத்துவார்கள் என்று கூறப்படுகிறது.