திருவள்ளூர் | சோழவரம் அடுத்த சோழிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன். 34 வயதான இவருக்கு சிவக்குமார் என்பவருடன் பல வருடங்களாக நெருங்கிய நட்பு இருந்து வந்தது.
நண்பர்கள் இருவரும் கட்டிடத் தொழில் செய்து வந்த நிலையில் ஒருவருக்கொருவர் நேரம் கிடைக்கும் போது சந்தித்து வெளியே சுற்றி வந்துள்ளனர்.
இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சூர்யா என்பவரிடம் இருந்து இருசக்கர மோட்டார் பைக்கை வாங்கியிருந்தார் ஆனந்தன். இரவலாக கிடைத்த பைக்கில் நண்பர்கள் இருவரும் ஊரை சுற்றி வந்த நிலையில் இருவருக்கும் பணத்தேவை ஏற்பட்டிருக்கிறது.
மேலும் படிக்க | ‘துணிவு’ படத்துக்காக பலியான மேலும் ஒரு உயிர்...
இதையடுத்து சுரேஷின் பைக்கை அவரது அனுமதியில்லாமலேயே 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்று அந்த பணத்தை வைத்து ஊதாரித்தனமாய் திரிந்துள்ளனர். இந்த சம்பவம் அறிந்த இந்த இருவரின் மனைவிகளும், தனித்தனியே திட்டித் தீர்த்துள்ளனர்.
மனைவியின் அர்ச்சனையை சகித்துக் கொள்ள முடியாமலும், விற்பனை செய்த வாகனத்தை திருப்பி மீட்க முடியாமலும் தவித்த ஆனந்தன், சிவக்குமார் இருவரும் பதறிப்போயினர்.
இதனால் 22-ம் தேதியன்று சோழிப்பாளையம் சிவன் கோயில் அருகே உள்ள காலி மைதானத்துக்கு சென்ற நண்பர்கள் மதுவில் கொக்கு மருந்தை கலந்து குடித்து தற்கொலை செய்தனர்.
இதுகுறித்து சம்பவ இடத்துக்கு வந்த சோழவரம் போலீசார், உயிரிழந்த இருவரது உடலையும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அடுத்தவர் உடைமைகளை இரந்து கேட்ட நண்பர்கள், அதை திருப்பி அளிக்க முடியாமல் இறந்து போன சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் படிக்க | பெந்தேகோஸ்தே சபையில் நடந்த பரபரப்பு சம்பவம்...