Uttar Pradesh crime news 
க்ரைம்

"உன் மனைவி எனக்கு சொந்தம் இல்லை என்றால்.." மிரட்டல் விடுத்த கள்ளக்காதலன்! கொலை செய்து 'தற்கொலை என சித்தரிக்க முயற்சி'

மனைவிக்கு ஏதோ நேர்ந்துவிட்டதாகவும், அவர் உடனடியாக வீட்டிற்கு வர வேண்டும் என்றும் அந்த அண்டை வீட்டுக்காரர் பதட்டமாக கூறியுள்ளார்.

Vinvizhi Leninton

உத்திரபிரதேச மாநிலத்தின் காசியாபாத், லோனியைச் சேர்ந்த ஒருவர், ஞாயிற்றுக்கிழமை அன்று தனது அண்டை வீட்டுப் பெண்ணைக் கழுத்தை நெரித்துக் கொன்று, அது தற்கொலை என நாடகமாடியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அப்பெண்ணின் இரண்டு பிள்ளைகள் இந்தச் சம்பவத்தை நேரில் கண்டு, தங்கள் தந்தையிடமும் காவல்துறையிடமும் இதுகுறித்துத் தகவல் தெரிவிக்கப்பட்டதால் குற்றம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ரிஸ்வானா (31) மற்றும் அவரது கணவர் நிசார், அவர்களது மகன் அஹத் (8) மற்றும் மகள் நிடா (6) ஆகியோருடன் ஒன்பது மாதங்களாக ஒரு குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர். மேலும், குற்றம் சாட்டப்பட்ட ஃபைசான் என்ற இளைஞர் ரிஸ்வானா குடும்பத்தினரின் வீட்டிற்கு மேல் தளத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், ரிஸ்வானாவும் ஃபைசானும் நட்பாக பழகிய நிலையில் அது நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியது. இவர்கள் ஆறு மாதங்களாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் இதுகுறித்து அறிந்த ரிஸ்வானாவின் கணவர் நிசார் ஃபைசானை நேருக்கு நேர் சந்தித்து, "இனி ஒருபோதும் தன் வீட்டிற்குள் வரக்கூடாது" என்று கூறியுள்ளார்.

பின்னர் ஜூலை 7 அன்று, ஃபைசான் கட்டிடத்தை விட்டு வெளியேறியுள்ளார். ஆனாலும் தொடர்ந்து அந்தக் குடும்பத்தைத் துன்புறுத்தி வந்துள்ளார். ஃபைசான் அவர் தங்கியிருந்த கட்டிடத்தை விட்டு வெளியேறும்போது, ​​நிசாரை மிரட்டியுள்ளார். "உன் மனைவி எனக்கு சொந்தமாக இல்லையென்றால், அவள் யாருக்கும் சொந்தமாக மாட்டாள்" என்று கூறி அங்கிருந்து சென்றிருக்கிறார். சனிக்கிழமையன்று, நிசார் வீட்டில் இல்லாதபோது, ​​காலை சுமார் 11.30 மணியளவில் அவரது அண்டை வீட்டுக்காரரிடமிருந்து ஒரு அழைப்பு அவருக்கு வந்துள்ளது.

அவரது மனைவிக்கு ஏதோ நேர்ந்துவிட்டதாகவும், அவர் உடனடியாக வீட்டிற்கு வர வேண்டும் என்றும் அந்த அண்டை வீட்டுக்காரர் பதட்டமாக கூறியுள்ளார். உடனடியாக வீட்டிற்கு நிசார் வந்தபோது, ரிஸ்வானா கழுத்தில் சுருக்குக் கயிற்றுடன் சுயநினைவின்றி கிடப்பதைக் கண்டுள்ளார். சற்றும் தாமதிக்காமல் ரிஸ்வானா உடனடியாக ஜிடிபி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு அவர் வந்தடைந்த உடனேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். பார்வையற்றவரான நிசாரின் மகன் அஹத், நிசார் சென்ற சிறிது நேரத்திற்குப் பிறகு தங்களது வீட்டிற்கு வந்த ஃபைசான் என்பவனால் ரிஸ்வானா கொலை செய்யப்பட்டதாக அந்த சிறுவன் தன் தந்தையிடம் கூறியுள்ளார். மேலும், "தனது மனைவி கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டிருக்கலாம்" என்று மருத்துவர்களும் தன்னிடம் கூறியதாக நிசார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, லோனி காவல் நிலையத்தில், ஃபைசான் மீது பிஎன்எஸ் பிரிவு 103 (கொலை)-ன் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், குற்றம் சாட்டப்பட்டவரைக் கண்டுபிடிக்க ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சம்பவத்தன்று, ஃபைசான், ரிஸ்வானாவைச் சந்திக்க வந்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணைத் தன்னுடன் வருமாறு கட்டாயப்படுத்த முயன்றதாகவும், ஆனால் அவர் மறுத்ததால் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகவும் நாங்கள் சந்தேகிக்கிறோம்," என்று துணை ஆணையர் (கிராமப்புறம்) சுரேந்திர நாத் திவாரி தெரிவித்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.