Hidden recording devices 
க்ரைம்

“கேமரா லென்ஸை பார்த்து.. தலைமை ஆசிரியர் செய்த காரியம்!” - மாணவிகள் உடை மாற்றும் அறையில் மறைத்து வைக்கப்பட்ட 4 கேமராக்கள்!

இரண்டு மறைக்கப்பட்ட கேமராக்கள் நடனக் குழுவின் உடை மாற்றும் அறையில் வைக்கப்பட்டிருந்ததாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Vinvizhi Leninton

மேற்கு வர்ஜீனியாவில், மாணவிகளின் உடை மாற்றும் அறைகளிலும், நடனக் குழுவின் உடை மாற்றும் பகுதியிலும் மறைத்து வைக்கப்பட்டிருந்த நான்கு கேமராக்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒரு உயர்நிலைப் பள்ளி முதல்வர் கைது காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு வர்ஜீனியாவின் வெல்ஸ்பர்க்கில் உள்ள புரூக் உயர்நிலைப் பள்ளியின் தலைவரான 53 வயதான எரிக் ஜேம்ஸ், தற்போது தொடுக்கப்பட்டுள்ள வழக்கிற்காக அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பள்ளியின் பாதுகாப்பு ஊழியர் ஒருவர், மறைத்து வைக்கப்பட்டிருந்த பேனா போன்ற பதிவு செய்யும் கருவிகளை முதலில் கண்டுபிடித்ததைத் தொடர்ந்து, சட்ட அமலாக்கத் துறையினர் உடனடியாகத் தலையிட்டு கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

புரூக் கவுண்டி ஷெரிப் அலுவலகத்தால் தாக்கல் செய்யப்பட்ட குற்றவியல் புகார்களின்படி, மீட்கப்பட்ட கேமரா போன்ற சாதனங்கள் ஒன்றிலிருந்து புலனாய்வாளர்கள் மீட்டெடுத்த காணொளிக் காட்சியில் ஜேம்ஸ் காணப்பட்டுள்ளார். அதுவே அவரை நேரடியாகக் குற்றவாளியாக்கியது. அந்த வீடியோவில், தலைமை ஆசிரியர் கேமரா லென்ஸை நேராகப் பார்த்தபடி, அதைத் தரையில் வைத்து அதன் கோணத்தைச் சரிசெய்வது பதிவாகியிருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், ஜேம்ஸ் மொத்தம் நான்கு மறைக்கப்பட்ட சாதனங்களைத் தானே தனிப்பட்ட முறையில் வைத்ததாக அதிகாரிகளிடம் தற்போது ஒப்புக்கொண்டுள்ளார்.

பெண்களின் உடற்பயிற்சிக் கூடத்தின் உடை மாற்றும் அறையில், பேனா கேமரா மற்றும் சாவிக்கொத்து கேமரா அடங்கிய இரண்டு கருவிகள் தரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. மேலும் இரண்டு மறைக்கப்பட்ட கேமராக்கள் நடனக் குழுவின் உடை மாற்றும் அறையில் வைக்கப்பட்டிருந்ததாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், கேமராக்கள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து புரூக் கவுண்டி ஷெரிப், அந்த மாவட்டத்திற்குள் உள்ள அனைத்து தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளிகளிலும் விரிவான மின்னணு சோதனையினை நடந்த உத்தரவிட்டுள்ளார்.

கடந்த செப்டம்பர் 2, புதன்கிழமை அன்று, மாணவர்கள் அன்றைய தினத்திற்காகப் பள்ளி முடிந்து சென்ற பிறகு, மாலை 4 மணிக்குச் சற்று முன்னதாக, புரூக் உயர்நிலைப் பள்ளியில் வைத்து துணை அதிகாரிகளும் மேற்கு வர்ஜீனியா மாநில காவல்துறையினரும் ஜேம்ஸைக் கைது செய்துள்ளனர். அந்த நேரத்தில், சட்ட அமலாக்கத் துறையினர் பள்ளி வளாகத்தையே ஒரு அலசு அலசியுள்ளனர். மற்ற கட்டிடங்களில் கூடுதல் பதிவுக் கருவிகள் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

ஜேம்ஸ் ஜூன் 2023 முதல் புரூக் உயர்நிலைப் பள்ளியின் முதல்வராகப் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் உள்ளூர் கல்வி நிலையங்களில் பல ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். விசாரணையை அடுத்து, ஜேம்ஸ் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பள்ளி நிர்வாகத்தினர் அவரை உடனடியாக இடைநீக்கம் செய்துள்ளனர். அவரை தற்போது 100,000 டாலர் பிணைத்தொகையை வழங்க கோரி வடக்கு மண்டல சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நீதிமன்ற ஆவணங்களின்படி, ஜேம்ஸ் பிணைத்தொகை செலுத்தி வெளியே வந்தால், அவர் கட்டாய மின்னணு கண்காணிப்புடன் கடுமையான வீட்டுக் காவலில் வைக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்