கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பேரண்டப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் 41 வயதுடைய கோவிந்தராஜ். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்திருக்கிறார். இவரது அக்கா பேத்தியான 17 வயது சிறுமி கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். சிறுமியின் வீட்டிற்கு கல்லூரிக்கும் தொலைவு அதிகம் என்பதால் அவர் விடுதியில் தங்கி பயின்று வந்திருக்கிறார். எனவே கோவிந்தராஜ் அடிக்கடி விடுதிக்கு சென்று மாணவியிடம் பழகி வந்திருக்கிறார்.
பின்னர் மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி அடிக்கடி அவரை வெளியில் அழைத்து சென்றதாக சொல்லப்படுகிறது. மேலும், கடந்த ஜனவரி மாதம் சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது, கோவிந்தராஜ் அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறுமி கர்ப்பமான நிலையில், கடந்த சில வாரங்களாக சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. கடந்த (ஆக 21) ஆம் தேதி இரவு சிறுமிக்கு திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது பெற்றோர் அவரை ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில், சிறுமி 7 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதற்கிடையே, மருத்துவமனையில் சிறுமிக்கு குறைப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், பிறந்த குழந்தை சிறிது நேரத்திலேயே உயிரிழந்தது. இதனால் மருத்துவமனை தரப்பில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து ஓசூர் அனைத்து மகளிர் போலீசார் மருத்துவமனைக்கு சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது, தனது உறவினரான கோவிந்தராஜ் பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து போலீசார் கோவிந்தராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை தொடர்ந்து சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் கோவிந்தராஜ் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விடுதியில் தங்கி கல்வி பயின்ற மாணவி உறவினராலேயே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்