இந்தியாவைச் சேர்ந்த, எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணராக விரும்பும் ஒரு நபர், AI மூலம் இன்ஃப்ளூயன்சரான எமிலி ஹார்ட் என்ற பெண்ணை உருவாக்கி, அமெரிக்காவை ஆதரிப்பதைக் காட்டி பணம் சம்பாதித்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் உள்ள 22 வயது இளைஞர் ஒருவர், இணையத்தை பயன்படுத்தும் ஆண்களிடமிருந்து பணம் சம்பாதிப்பதற்காக இந்தக் கணக்கை உருவாக்கியுள்ளார். தனது மருத்துவ படிப்பிற்காக பணத்தேவை இருந்துள்ளது. எனவே AI மூலம் ஒரு பெண்ணின் முகம், உடல் அனைத்தையும் வடிவமைத்து உருவாக்க பல செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்தியுள்ளார். இணையத்தில் "எமிலி ஹார்ட்" என்று பரவலாக அறியப்பட்ட அந்த இன்ஃப்ளூயன்சர், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை ஆதரித்து, அடிக்கடி கிறிஸ்தவம் பற்றிப் பதிவிடும் பெண்ணைப் போலத் தோற்றமளிக்கச் செய்தார். எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணராக விரும்பும் அந்த இளைஞர், எமிலி ஹார்ட் அமெரிக்காவை ஆதரிப்பது போலவும், பிகினிகளில் போஸ் கொடுப்பது, பனிக்கட்டியில் மீன்பிடிப்பது, பீர் அருந்துவது, துப்பாக்கிகளைக் கையாள்வது போன்ற செயல்களில் ஈடுபடுவது போலவும், தான் ஒரு செவிலியர் என்றும் இன்ஸ்டாகிராமில் காட்டியிருந்தார்.
தனது மருத்துவ படிப்பு காலத்தில் பணமின்மையால் தவித்தபோதும், அமெரிக்காவுக்குக் குடிபெயர்வதற்குப் போதுமான பணத்தைச் சேமிக்க முயன்றபோதும் இந்த இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கியதாக அவர் கூறினார். முதலில், அவர் இணையத்தில் பணம் சம்பாதிக்க மட்டுமே விரும்பியுள்ளார். அதனால், பிகினி அணிந்த ஒரு இளம் பெண்ணின் படங்களை உருவாக்க அவர் செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்தியுள்ளார். பின்னர், அந்தக் கணக்கை எவ்வாறு வெற்றிகரமாக்குவது என்பது குறித்து கூகிளின் ஜெமினி என்ற செயற்கை நுண்ணறிவிடம் கேட்டுள்ளார். பெரும்பாலும் அதிகமாக அமெரிக்காவை ஆதரிப்பவர்கள், செலவழிக்க அதிகப் பணம் உள்ளவர்களாகவும் இருக்கும் அமெரிக்காவில் உள்ள வயதான ஆண்கள் போன்ற பழமைவாத (MAGA) ஆதரவாளர்கள் அடங்கிய ஒரு குறிப்பிட்ட பார்வையாளர்களை இலக்கு வைக்குமாறு அந்தச் செயற்கை நுண்ணறிவு அவருக்கு பரிந்துரைத்துள்ளது. எனவே, அவர் அந்தக் குறிப்பிட்ட குழுவினரைக் கவரும் வகையிலேயே அந்தப் போலி இன்ஃப்ளூயன்சரை வடிவமைத்துள்ளார். அது இன்ஸ்டாகிராமில் அவருக்குப் அதிகமாக பின்தொடர்பவர்களைப் பெறவும், அதன் மூலம் பணம் சம்பாதிக்கவும் உதவியது.
போலிக் கணக்கின் பின்னணியில் உள்ள நபர், தான் ஒவ்வொரு நாளும் ஒரு தெளிவான வழக்கத்தைப் பின்பற்றியதாகக் கூறினார். அவர் கிறிஸ்தவம், துப்பாக்கி உரிமைகள், கருக்கலைப்புக்கு எதிரான கருத்துக்கள் மற்றும் குடியேற்றத்திற்கு எதிரான எண்ணங்கள் போன்ற பழமைவாதக் கருத்துக்களை ஆதரிக்கும் உள்ளடக்கத்தைப் பதிவிட்டுவந்துள்ளார். உதாரணமாக, ஒரு பதிவில் அவள் துப்பாக்கியை ஏந்தியபடி, "பின்தொடர்வதை நிறுத்த ஒரு காரணம் வேண்டுமானால், கிறிஸ்துவே அரசர், கருக்கலைப்பு ஒரு கொலை, மற்றும் சட்டவிரோதமாகக் குடியேறிய அனைவரும் நாடு கடத்தப்பட வேண்டும்" என்ற தலைப்புடனும் சில பதிவுகளை பதிவிட்டுள்ளார். "நான் பதிவிட்ட ஒவ்வொரு ரீலும் 3 மில்லியன் பார்வைகள், 5 மில்லியன் பார்வைகள், 10 மில்லியன் பார்வைகளைப் பெற்றுக்கொண்டிருந்தது. அல்காரிதத்தமும் அத்தகைய பார்வையாளர்களுக்கு இதை பரிந்துரைத்துள்ளது. ஒரு மாதத்திற்குள், எமிலி ஹார்ட்டுக்கு 10,000-க்கும் மேற்பட்ட இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்கள் கிடைத்தனர். அவர்களில் பலர், ஃபேன்வியூவில் இருந்த நபர்கள். அவர்கள் இந்த இன்ஸ்டாகிராம் கணக்கிற்கு மாதம்தோறும் செலுத்தியிருந்தனர்," என்று அவர் ' தி வயர்ட்' பத்திரிகையிடம் கூறியுள்ளார்.
"நான் ஒருநாளில் 30 முதல் 50 நிமிடங்களைச் செலவழித்து வந்தேன், ஒரு மருத்துவ மாணவனுக்கு தேவையான நல்ல வருமானம் ஈட்டி வந்தேன். இந்தியாவில், தொழில்முறை வேலைகளில் கூட இந்த அளவு பணம் சம்பாதிக்க முடியாது. ஆன்லைனில் பணம் சம்பாதிப்பதற்கு இதைவிட எளிதான வழியை நான் பார்த்ததில்லை," என்று அவர் மேலும் கூறினார். அந்த இளைஞர், தான் மாதத்திற்கு சில ஆயிரம் டாலர்கள் சம்பாதிப்பதாகவும் கூறியுள்ளார். சாம், அந்தப் போலி இன்ஃப்ளூயன்சரின் இன்னும் ஆபாசமான படங்களை உருவாக்க, X-இன் க்ரோக் AI-ஐயும் பயன்படுத்தினார். பின்னர் அவர் இந்த உள்ளடக்கத்தை 'ஃபேன்வியூ' என்ற தளத்தில் பதிவேற்றியுள்ளார். அங்கு மக்கள் பணம் செலுத்தி பிரத்யேகப் புகைப்படங்களைப் பார்க்கவும், அந்த போலி AI-யுடன் பேசவும் செய்ததாக கூறினார்.
"நான் அடிப்படையில் ஒன்றும் செய்யாமல் இருந்தேன். ஆனால், பணம் வெள்ளமென வந்து கொண்டிருந்தது," என்று அவர் கூறினார். மோசடி நடவடிக்கைகளுக்காக ஹார்ட்டின் இன்ஸ்டாகிராம் கணக்கு பிப்ரவரியில் முடக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்