மகாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் பரபரப்பான கொலை வழக்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் தொடங்கிய நட்பு, காதலாக மலர்ந்து, பின்னர் ஒரு கொடூரமான கொலையில் முடிவடைந்துள்ளது.
எட்டபள்ளி தாலுக்காவில், இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. காவல்துறையின் கூற்றுப்படி, இந்த வழக்கில் ஓரினச்சேர்க்கையாளர் உறவு சம்பந்தப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இதில், தனிப்பட்ட தகராறு மற்றும் திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் ஆத்திரமடைந்த ஒரு இளைஞன், தனது நண்பனைக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.
இறந்தவர் நாகேபள்ளியைச் சேர்ந்த கேரேஜ் தொழிலாளியான சதீஷ்குமார் நிஷாத் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் ஒடிசாவின் நபரங்பூரைச் சேர்ந்த சூரஜ் ஹல்தாரை இன்ஸ்டாகிராமில் சந்தித்துள்ளார். இந்த ஆன்லைன் நட்பு ஆரம்பத்தில் நண்பர்களாக ஆரம்பித்துள்ளது, அப்படியே படிப்படியாக காதலாக மாறியுள்ளது. சதீஷ் குமாரைச் சந்திப்பதற்காக சூரஜ் ஒடிசாவிலிருந்து நாகேபள்ளிக்கு வந்திருந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை காலை, சூரஜ் தன் கிராமத்திற்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, அவரை வழியனுப்புவதற்காக சதீஷ் குமார் சத்தீஸ்கர் எல்லை வழியாகத் தன் சொந்தக் காரில் ஒடிசாவுக்குப் புறப்பட்டுள்ளார். இதனையடுத்து சூரஜ், சதீஷ் குமாருக்குத் திருமண ப்ரோபோசல் செய்துள்ளார். ஆனால் , இறந்தவருக்கு ஏற்கனவே திருமணமாகியிருந்ததால் இதனை மறுத்துள்ளார். பின்னர் இந்த விஷயம் தெரியவந்த பின்பு, இருவருக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது.
வழியில், அவர்கள் தேவதா கிராமத்தை அடைந்தபோது, சதீஷ் குமாரின் திருமண வாழ்க்கை மற்றும் அவர்களது உறவு குறித்து இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் மூண்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதால், கோபத்தில் சூரஜ் ஒரு கத்தியை எடுத்து சதீஷ் குமாரைக் குத்தத் தொடங்கியுள்ளார். சம்பவத்திற்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்டவர் தப்பிச் செல்ல முயன்றபோது, உள்ளூர்வாசிகள் அவரைப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். ஹலேவாரா காவல் நிலையம் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.