கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள முத்துகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் 38 வயதான ஆனந்தராஜ். இவர் அதே பகுதியில் கொத்தனாராக பணிபுரிந்து வந்துள்ளார். ஆனந்தராஜுக்கும் பக்கத்து ஊரை சேர்ந்த 31 வயதுடைய கவிதா என்ற பெண்ணுக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கட்டிட வேலை செய்யும் ஆனந்தராஜுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வரும் ஆனந்தராஜ் மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். மேலும் சரிவர வேலைக்கு செல்லாமல் கவிதா வேலைக்கு சென்று வீட்டு செலவிற்காக சேமித்து வைத்திருந்த பணத்தையும் எடுத்து சென்று குடித்துவிட்டு தகராறு செய்து வந்துள்ளார். மேலும் சில நாட்களாக மனைவி கவிதாவின் நடத்தையை தவறாக பேசி சண்டை போட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த கவிதா தனது இரண்டு மகள்களையும் அழைத்து கொண்டு தாய் வீட்டிற்கு சென்று அங்கு வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் ஆனந்தராஜ் தனது மனைவியை சமாதானம் செய்து அழைத்து வருவதற்காக அவரது மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார் அப்போது கவிதா வீட்டில் இல்லாமல் அருகில் உள்ள கரும்பு தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். எனவே கவிதாவை சமாதானம் செய்ய ஆனந்தராஜ் கரும்பு தோட்டத்திற்கு சென்றுள்ளார்,
ஆனந்தராஜ் கவிதாவை தன்னுடன் அழைத்த போது அவர் வர மறுப்பு தெரிவித்ததால் மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்படுத்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆனந்தராஜ் தனது கையில் வைத்திருந்த கத்தியால் கவிதாவின் முதுகில் குத்தியுள்ளர். இதில் பலத்த காயமடைந்த கவிதா சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மனைவியை கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்ற கணவர் ஆனந்தராஜை தேடி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.