க்ரைம்

ஆபாச பாடம் நடத்திய குற்றச்சாட்டுக்கு ஆசிரியர் போக்சோ பிரிவில் கைது!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பள்ளியில், கணக்குப்பதிவியல் ஆசிரியரை, ஆபாச பாடம் நடத்தி குற்றச்சாட்டுக்காக, போலீசார் போக்சோ உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Malaimurasu Seithigal TV

கன்னியாகுமரி: இரணியல் பகுதியில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை சுமார் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் அந்த பள்ளியில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு கணக்கு பதிவியியல் பாடம் நடத்தும் ஆசிரியர் கிறிஸ்துதாஸ் என்பவர் வகுப்பறையில் மாணவர்களுக்கு ஆபாச பாடம் நடத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் சம்பவம் குறித்து மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்த நிலையில், இது குறித்து சில மாணவிகள், குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். ஆனால், ஆசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படும் நிலையில், கடந்த 6-ம் தேதி பள்ளிக்கு வந்த மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் அறையை முற்றுகையிட்டு ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து வாக்கு வாதம் நடைபெற்று வந்த நிலையில் அங்கு வந்த தக்கலை கல்வி மாவட்ட அதிகாரி எம்பெருமாள் ஆசிரியரிடம் விசாரணை நடத்தினார். ஆனால், ஆசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் நேற்று மாணவர்கள் மற்றும் பெற்றோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகாரளித்தனர்.

இந்த நிலையில் ஆசிரியர் கிறிஸ்துதாஸ் மீது போக்சோ உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த குளச்சல் அனைத்து மகளிர் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய ஆசிரியரே, இப்படியொரு கீழ் தரமான செயலில் ஈடுபட்டது அனைவரின் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.