தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள மாத்தூர் மெயின் ரோடு பகுதியில் எஸ் கே ஆர் என்ற நகை அடகு கடை நடத்தி வருபவர் 72 வயதான எஸ் கே ஆர் கனகராஜ். இவர் மாத்தூர் அதிமுக கிளைக் கழக அவைத் தலைவராக உள்ளார். இவர் தனது வீட்டு திண்ணையில் அடகு கடை வைத்துள்ளார். பைனான்ஸ் தொழிலும் செய்து வருகிறார். மேலும் கனகராஜ் இவரது வீட்டிற்கு அருகில் பெட்ரோல் பங்க் ஒன்றையும் நடத்தி வருகிறார். வழக்கம்போல் இவர் இன்று இரவு வீட்டு திண்ணையில் அமர்ந்து இருந்தார் அப்போது திடீரென அங்கு வந்த மர்ம நபர் சற்றும் எதிர்பாராத விதமாக கத்தியை எடுத்து கனகராஜ் மீது குத்தியுள்ளார்.
இதனால் படுகாயமடைந்த கனகராஜ் ரத்தவெள்ளத்தில் மிதந்து அதே இடத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். கனகராஜின் உடலை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் கத்தி கூச்சலிட்டுள்ளனர். அந்த சத்தத்தை கேட்டு வெளியில் வந்த அக்கம் பக்கத்தினர் கனகராஜின் உடலை பார்த்து இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து நாச்சியார் கோயில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து கனகராஜ் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது பற்றி நாச்சியார் கோயில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கொலை செய்ய வந்த நபர் யார் முன்விரோதமா? அல்லது அரசியல் உட்கட்சி பிரச்சனையா, பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவிடைமருதூர் டிஎஸ்பி ராஜு தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தொழிலதிபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டிருப்பது அந்த பகுதியில் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார் அதன் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதுமட்டுலாமல் அன்று இரவு சந்தேகத்திற்கு இடமாக அப்பகுதியில் நடமாடிய நபர்களை போலீசார் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். விரைவில் குற்றவாளியை கண்டறிந்து கைது செய்யுமாறு கனகராஜின் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் போலீசாரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.