தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மீனாட்சி பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுடலைமணி. இவரது மகன் மாடசாமி கோயம்புத்தூரில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்தார். அப்போது மாடசாமிக்கு அதே பகுதியை சேர்ந்த பார்வதி நாதன் என்பவரது மகள் சந்திரவதனா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் நாளடைவில் இவர்களது பழக்கம் காதலாக மாறியுள்ளது. இதனை அறிந்த பெண் வீட்டார் இவர்களது காதலுக்கு மறுப்பு தெரிவித்து சந்திரவதனாவை மாடசாமியுடன் பேசக்கூடாது என கண்டித்திருக்கின்றனர்.
இதைத்தொடர்ந்து காதலி பேசாததாலும் காதலை பெற்றோர் ஏற்காததாலும் மனம் உடைந்த மாடசாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த மூன்றாம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் மாடசாமியின் தொலைபேசியில் மாடசாமி காதலித்த பெண்ணின் புகைப்படங்கள் இருப்பதாகவும் அதை செல்போனில் இருந்து அகற்ற கூறி கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண்ணின் சகோதரர் சிவபாரதி இறந்த மாடசாமியின் தந்தையை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சுடலைமணி மற்றும் அவரது உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் காவல்துறையினர் சுடலைமணியை மிரட்டியதாக வழக்கு பதிவு செய்து பெண்ணின் சகோதரர் சிவபாரதி மற்றும் அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர்கள் முத்துக்குமார் இசக்கி கண்ணன் ஆகிய மூன்று பேரை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்ற நிலையில் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள வாலிபர்கள் முத்துக்குமார் மற்றும் இசக்கி கண்ணன் உறவினர்கள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து இந்த சம்பவத்தில் தொடர்பு இல்லாத முத்துக்குமார் மற்றும் இசக்கி கண்ணன் ஆகியோரை காவல்துறையினர் பொய் வழக்கு பதிந்து கைது செய்துள்ளனர் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
விசாரணைக்கு என்று அழைத்து விட்டு பின்னர் பொய் வழக்கு போட்டு தற்போது சிறையில் அடைத்துள்ளனர் இவ்வாறு காவல்துறையினர் பொய் வழக்கு போட்டதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் இந்த சம்பவத்திற்கு தொடர்பு இல்லாத அவர்கள் இருவரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர். மேலும் செய்தியாளர்களை சந்தித்த அந்த இரண்டு வாலிபர்களின் உறவினர்களும் சிவபாரதி சுடலைமணியை தாக்கிய போது முத்துக்குமார் மற்றும் இசக்கி கண்ணன் கோவில் கொடைக்கு சென்று இருந்ததாக தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.