Madurai Devendran Murder Case 
க்ரைம்

“மனைவியின் காதலனை ஸ்கெட்ச் போட்டு கொன்ற கணவன்” - உடந்தையாக இருந்த முன்னாள் காதலி.. நள்ளிரவில் நடந்தது என்ன?

ராஜபாண்டி தனது முன்னாள் காதலியான திருமங்கலத்தைச் சேர்ந்த முத்துமாரியிடம் மீண்டும் பேசி பழகியுள்ளார்...

Mahalakshmi Somasundaram

மதுரை மாவட்டம், சிலைமான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தந்தை பெரியார் நகர் பகுதியில், தனியார் கல்லூரி அருகே இளைஞர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெருங்குடி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கொலை சம்பவத்தில் ஈடுபட்ட இருவரில் ஒருவருக்கு கண்ணில் காயம் ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அருகில் உள்ள மருத்துவமனைகளில் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது, வலையங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒருவர் கண்ணில் ஏற்பட்ட காயத்திற்காக சிகிச்சை பெற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், வேடர் புளியங்குளத்தைச் சேர்ந்த 27 வயதுடைய ராஜபாண்டி, கப்பலூரைச் சேர்ந்த 24 வயதுடைய ராஜேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். போலீஸ் விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலைச் சேர்ந்த 26 வயதுடைய தேவேந்திரன் என்பது தெரியவந்தது.

இவர் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றியபோது, மதுரையைச் சேர்ந்த ஒரு பெண்ணுடனும், மேலூரைச் சேர்ந்த பிரபு ராஜா என்பவருடனும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது தேவேந்திரனுக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. ஆனால், இவர்களின் திருமணத்திற்கு இரு குடும்பத்தினரும் சம்மதிக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அந்தப் பெண்ணுக்கும் வேடர் புளியங்குளத்தைச் சேர்ந்த ராஜபாண்டிக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. பின்னர் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அந்தப் பெண் தற்போது தனது தாய் வீட்டில் வசித்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த நிலையில், ராஜபாண்டி தனது முன்னாள் காதலியான திருமங்கலத்தைச் சேர்ந்த முத்துமாரியிடம் மீண்டும் பேசி பழகியுள்ளார். அப்போது, தனது மனைவி வேறு ஒருவருடன் பழகி வருவதாகவும், அவரை தீர்த்துக்கட்ட வேண்டும் என்றும் ராஜபாண்டி கூறியதாக தெரிகிறது. மேலும், தேவேந்திரனிடம் முத்துமாரி பேசி பழகி, அவரை மதுரைக்கு வரவழைக்க வேண்டும் என ராஜபாண்டி கேட்டுக்கொண்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து முத்துமாரி இன்ஸ்டாகிராம் மூலம் தேவேந்திரனிடம் பேசி பழகி, சம்பவத்தன்று அவரை மதுரை தந்தை பெரியார் நகர் பகுதிக்கு வரவழைத்திருக்கிறார்.

தேவேந்திரன், முத்துமாரியை நம்பி தனது நண்பர் பிரபு ராஜாவுடன் அப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த ராஜபாண்டி மற்றும் அவரது நண்பர் ராஜேஷ் ஆகியோர், அரிவாளால் தேவேந்திரனை வெட்டிக் கொலை செய்ததாக ராஜபாண்டி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த தாக்குதலின்போது ராஜேஷின் கண்ணில் காயம் ஏற்பட்டு நிலையில் இருவரும் வலையங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த போது போலீசாரிடம் சிக்கியுள்ளனர்.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், கொலைக்கு முத்துமாரியும் உதவியதாக தெரியவந்ததை அடுத்து, அவரையும் சிலைமான் போலீசார் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மனைவியின் முன்னாள் காதலனை பழிவாங்க, கணவனின் முன்னாள் காதலி உதவியதாக கூறப்படும் இந்த கொலை சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்