க்ரைம்

35 கைம்பெண்களை ஏமாற்றிய காதல் மன்னன்...வெளியான பல திடுக்கிடும் தகவல்கள்...!

Tamil Selvi Selvakumar

தாம்பரம் அருகே பல கைம்பெண்களை ஆசை வார்த்தைக் கூறி ஏமாற்றிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. 

செங்கல்பட்டு மாவட்டம், முடிச்சூர் பகுதியை சேர்ந்த கைம்பெண் ஒருவர், ஹபீப் ரஹ்மான் என்பவர் தன்னிடம் பழகி ஆசை வார்த்தை கூறி  30 லட்சம் ரூபாயும், 15 சவரன் தங்க நகைகளையும் பறித்துச் சென்று விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், பூந்தமல்லியில் அவரது வீட்டில் தங்கிருந்த ஹபீப் ரஹ்மானை கைது செய்தனர். பின்னர் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. 

விசாரணையில், திருமண தகவல் குறித்து ஆன்லைனில்  வரும் விளம்பரங்கள் மூலம் கைம்பெண்களின் தகவல்கள்களை பெற்று, அவர்களை தொடர்பு கொண்டு ஏமாற்றியதை ஒப்புக்கொண்டார். 

மேலும் இதுவரை தமிழ்நாடு முழுவதும் 35க்கும் மேற்பட்ட கைம்பெண்களை அவர், ஏமாற்றி பணம் மற்றும் நகைகளை பெற்று கொண்டு  உல்லாசமாக வாழ்ந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவனிடமிருந்த விலையுயர்ந்த கார் மற்றும் இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.