திருச்சி திருவானைக்காவல் கீழ கொண்டையம் பேட்டை தாகூர் தெரு அருகே கடந்த வாரம் மனித மண்டை ஓடும் எலும்புக்கூடும் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற ஸ்ரீரங்கம் போலீசார் எலும்புக்கூட்டை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், எலும்புக்கூடு எரிக்கப்பட்ட நிலையில் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அந்தப் பகுதியில் யாரேனும் காணாமல் போயுள்ளார்களா என போலீசார் விசாரணை நடத்தியபோது, வினோத்குமார் என்ற இளைஞர் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
வினோத் குமாரின் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், மீட்கப்பட்ட எலும்புக்கூடு அவருடையதே என உறுதி செய்யப்பட்டது. மனநல பாதிப்பால் வேலை செய்யாமல் சுற்றித்திரிந்த வினோத்குமார், கடைசியாக அப்பகுதியைச் சேர்ந்த ஆறு இளைஞர்களுடன் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த இளைஞர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. வினோத்குமார் மனநல பாதிப்பால் எந்த வேலைக்கு செல்லாமல் கோவில் அருகே யாசகம் எடுத்து வாழ்ந்து வந்திருக்கிறார்.
அப்போது சென்ற வாலிபர்களுக்கும் வினோத் குமாருக்கும் இடையே குடிபோதையில் ஏற்பட்ட தகராறின் போது, வினோத்குமாரை அந்த வாலிபர்கள் கட்டாயப்படுத்தி ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தியுள்ளனர். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து எதிர்த்ததால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் வினோத்குமார் சம்பவ இடத்திலேயே மயக்கிய நிலையில், பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
வழக்கு பதிவு செய்த போலீசார் கொலை சம்பவத்தில் தொடர்புடைய திருவானைக்காவல் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீராம், ஸ்ரீதர், ராஜ்குமார் என்கிற ராகுல், கருணாகரன் மற்றும் இரண்டு சிறுவர்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களில் ஒருவரை திருச்சி கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்துள்ள போலீசார், நான்கு பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தொடர்புடைய மற்றொரு சிறுவரை தேடி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.