க்ரைம்

உங்களுக்கு தெரியாதா? நான் உதவி செய்கிறேன்...தொடர் கைவரிசை காட்டிய மத்திய அரசு ஊழியர்!

Tamil Selvi Selvakumar

சென்னையில் உள்ள ஏடிஎம்-களில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த மத்திய அரசு ஊழியரை போலீசார் கைது செய்தனர். 

நூதனமுறையில் திருட்டு:

சென்னை எம்.கே.பி. நகரைச் சேர்ந்த ஜாக்லின் எனும் ஐடி நிறுவன ஊழியர், அம்பேத்கர் கல்லூரி சாலை அருகே உள்ள ஏடிஎம் மையத்திற்கு சென்றுள்ளார். புதிய ஏடிஎம் கார்டை பயன்படுத்தும்போது, கடவுச்சொல்லை எப்படி உபயோகிப்பது எனத்தெரியாததால், அருகில் இருந்த நபரிடம் ஜாக்லின் சந்தேகம் கேட்டுள்ளார். அந்த நபரும், ஏடிஎம் கார்டை வாங்கி உதவி செய்த நிலையில், சிறிதுநேரம் கழித்து ஜாக்லினின் வங்கி கணக்கிலிருந்து 40 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. 

உதவுவது போல் நடித்து திருட்டு:

இந்த சம்பவம் தொடர்பாக, ஜாக்லின் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஏடிஎம் மையத்தின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் 40வயது நபர் ஒருவர், ஜாக்லினுக்கு உதவுவது போன்று நடித்து தனது பாக்கெட்டில் இருந்த வேறொரு ஏடிஎம் கார்டை கொடுத்தது தெரியவந்தது. 

கைது செய்த போலீசார்:

விசாரணையில், அவர் பெரம்பூரைச் சேர்ந்த பிரபு என்பது தெரியவந்தது. அவரது வீட்டில் சோதனையிட்டபோது, 271 ஏடிஎம் கார்டுகள் சிக்கியது. மத்திய அரசு நிறுவனமான ஆவடி டேங்க் தொழிற்சாலையில் பணிபுரியும் பிரபு, ஏடிஎம்-களில் பணம் எடுக்க தெரியாத நபர்களிடம் தொடர்ந்து தனது கைவரிசையை காட்டிய நிலையில், அவரை போலீசார் கைது செய்தனர்.