TVK By-Election 2026 
க்ரைம்

"திருமணம் செய்து வைத்தால்.. அடித்தே கொலை செய்வோம்" - 3 ஆண்டு காதலை நிராகரிக்கும் காதலன்! சாதிதான் கொலை மிரட்டலுக்கு காரணமா?

"தன்னுடைய காதலனை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் இல்லை என்றால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்"

Vinvizhi Leninton

காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி பல இடங்களுக்கு அழைத்துச் சென்று தனிமையில் இருந்து விட்டு தன்னை ஏமாற்றிவிட்டு, தற்பொழுது சாதியை காரணம் காட்டி திருமணம் செய்து கொள்ள மறுக்கும் தன்னுடைய காதலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காதலி ஒருவர் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் பகுதியில் உள்ள சூரியூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். அதேபோல் திருச்சி மாவட்டம் அந்தோணியார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகப்பிரியா. இவர்கள் இரண்டு பேரும் கல்லூரியில் படிக்கும் போதே கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். மேலும் தன் காதலனுடன் சண்முகப்பிரியா பல்வேறு இடங்களுக்கு சென்றதோடு, தனிமையிலும் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஒருநாள் சண்முகப்பிரியாவின் தாய் தன் மகள் படிக்கும் கல்லூரிக்கு சாப்பாடு கொடுக்க சென்றுள்ளார். ஆனால், அப்போது அவரது மகள் கல்லூரியில் இல்லை. இதுகுறித்து அவரது மகளிடம் கேட்டபோது இவர்களது காதல் சண்முகப்ரியாவின் தாய்க்கு தெரியவந்துள்ளது. அப்போது சண்முகப்பியாவின் தாயின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதோடு, "உங்களின் மகளை திருமணம் செய்து காப்பாற்றுவேன்" என்று கூறி நம்பிக்கையளித்துள்ளார். மேலும், சண்முகபிரியாவின் தாய் சுரேஷ்குமாரின் சாதிக்குறித்து கேட்டுள்ளார். தாங்கள் பட்டியலின சமூகத்தினர் என்பதால் யோசித்துவிட்டு தன் மகளை திருமணம் செய்ய முடிந்தால் மட்டுமே பழகுமாறும் இல்லையென்றால் இதோடு நிறுத்திக்கொள்ளுமாறும் பெண்ணின் தாய் கூறியுள்ளார்.

ஆனாலும், நம்பிக்கையளிக்கும் வகையில் அவர் பேசியதாகவும், தனக்கு டைம் வேண்டும் என்று கேட்டதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், தனது அக்காவிற்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்கவேண்டும் என்றும் தனது அண்ணனிற்கும் திருமணம் ஆகவேண்டும் என்றும் அதன் பின்னர் உங்களின் மகளை நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, சண்முகப்பிரியாவின் வீட்டிற்கு அடிக்கடி அவருடைய தாய் சம்மதத்துடன் சுரேஷ்குமார் வீட்டிற்கு வந்து அவரது குடும்பத்துடன் நெருங்கி பழகியுள்ளார். இந்நிலையில், "கண்டிப்பாக உங்களுடைய மகளை திருமணம் செய்து கொள்வேன்" என கூறி பழகி வந்த சுரேஷ்குமார் தற்பொழுது சண்முகப்பிரியாவின் சாதியை காரணமாக கூறி, "எங்கள் வீட்டில் திருமணம் செய்வதற்கு சம்மதிக்கவில்லை, நான் உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது" என கூறி பேசுவதை நிறுத்தியுள்ளார். இதனிடையே, இதுகுறித்து சண்முகபிரியாவின் தாய், சுரேஷ் குமாரின் வீட்டிற்கு சென்று விசாரித்ததில், "உங்க சாதிக்கும் எங்க சாதிக்கும் ஒத்து வராது. அப்படியே உங்களின் மகளை எங்களது மகனுக்கு திருமணம் செய்து வைத்தால் சும்மாவிடமாட்டோம். அடித்து கொன்று விடுவோம்" என்று சுரேஷ் குமாரின் வீட்டார் கூறியதாக தெரிவித்தார்.

மேலும், சண்முகப்பிரியா தன்னுடைய காதலனிடம் பலமுறை தன்னை திருமணம் செய்தாகவேண்டும் என்றும் தனது நிலைமையை எடுத்து கூறியும் சுரேஷ் குமார் திருமணம் செய்வதற்கு சம்மதம் தெரிவிக்காமல் இருந்துள்ளார். தற்போது தன்னை சந்திப்பதையும் தவிர்த்து வருவதாக கூறி புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தன்னுடைய கும்பத்தினருடன் சென்று புகாரளித்துள்ளார் சண்முகப்பிரியா. மேலும், "தன்னுடைய காதலனை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் இல்லை என்றால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார். மேலும் சாதி பெயரை கூறி தன்னை திருமணம் செய்ய மறுக்கும் காதலன் மீது தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ள காதலியால் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்