க்ரைம்

“இரண்டாவது மனைவியுடன் தனி குடுத்தனம்” - கரும்பு ஜூஸ் கடையில் நடந்த பட்டா தகராறு.. தந்தையை கொன்ற மகன்!

முதல் மனைவி ஜெய செல்வியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சிவகுமார் நான்கு வருடமாக இரண்டாவது மனைவி ரேவதியுடன்

Mahalakshmi Somasundaram

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா மேலப்பாதி வாய்க்காங்கரை தெருவை சேர்ந்தவர் 52 வயதான சிவக்குமார். இவர் கீழையூர் உப்பு சந்தை மாரியம்மன் கோவில் எதிரே சாலையோரம் கரும்பு ஜூஸ் போடும் கடை வைத்து நடத்தி வந்தார். இவர் சகோதரிகளான ஜெய செல்வி மற்றும் ரேவதி ஆகிய இருவரையும் திருமணம் செய்து கொண்டுள்ளார். முதல் மனைவி ஜெய செல்விக்கு சிவசர்மா(26), சபரி கிருஷ்ணன்(25), அபினேஷ் (24) என்ற மூன்று மகன்களும், சிவப்பிரியா(20) என்ற ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் மூன்று பேரும் தங்களது சொந்த ஊரில் கூலி வேலை செய்து வருகின்றனர். அபினேஷ் மட்டும் சென்னையில் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார்.

அதே போல இரண்டாவது மனைவி ரேவதிக்கு சிவவர்மா(14), தீபலெட்சுமி (12), கலியவரதன்(9) என்ற இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். முதல் மனைவி ஜெய செல்வியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சிவகுமார் நான்கு வருடமாக இரண்டாவது மனைவி ரேவதியுடன் கீழையூர் உப்பு சந்தை, மாரியம்மன் கோவில் எதிரே உள்ள வாய்க்கால் ஓரம் கொட்டகை அமைத்து வசித்து வருகிறார். எனவே முதல் மனைவியின் மூத்த மகன் பட்டா கேட்டு தந்தை சிவக்குமாரிடம் அடிக்கடி பிரச்சனையில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாலை சிவக்குமார் வழக்கம் போல் கரும்பு ஜுஸ் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவ்விடத்திற்கு சிவகுமாரின் முதல் மனைவியின் மகனாக அபினேஷ் மது அருந்திவிட்டு தனது தந்தையிடம் பட்டா கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் தந்தை, மகனுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு அது கைகலப்பு ஆகியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அபினேஷ் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தந்தை சிவக்குமாரை குத்தியதில் இதயம் மற்றும் குடல் வெளியே வந்த நிலையில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சிவகுமார் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், டிஸ்பி பாலாஜி, செம்பனார்கோவில் காவல் ஆய்வாளர் கருணாகரன் மற்றும் பிற போலீசார் சம்பவ இடத்தில் இருந்த சிவக்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் அபினேஷை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடும்பத்தில் சொத்து பிரச்சினையால் இந்த கொலை நடந்ததா? அல்லது தந்தை செலவுக்கு பணம் கொடுக்காமல் தரக் குறைவாக திட்டியதால் ஆத்திரத்தில் கொலை நடந்ததா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மகனே தந்தையை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.