ஆந்திர மாநிலம், மார்க்கபுரம் மாவட்டம் யெர்ரகோண்டபாலம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் 21 வயதுடைய ஆஞ்சநேயலு. இவரது தாய் தந்தை இருவரும் சிறுவயதிலேயே உயிரிழந்த நிலையில் அக்கா மாமாவிடம் வளர்ந்து வந்திருக்கிறார். எனவே ஆஞ்சநேயலுக்கு திருமணம் ஏற்பாடு செய்ய முடிவு செய்த அவரது அக்கா கடந்த (மே 13) ஆம் தேதி அவரை பெண் பார்க்க அழைத்துச் சென்று மீண்டும் வீடு திரும்பியபோது பாதியிலே ஆஞ்சநேயலு முக்கிய வேலை இருப்பதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் இரண்டு நாட்கள் ஆகியும் வீட்டுக்கு திரும்பாமல் இருந்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த ஆஞ்சநேயலுவின் அக்கா மற்றும் அவரது உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் வழக்கு பதிவு செய்த யெர்ரகோண்டபாலம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கடைசியாக ஆஞ்சநேயலுவின் போன் பொட்டிரெட்டிபல்லி பகுதியில் இருந்தது தெரியவந்தது.தொடர்ந்து அப்பகுதிக்கு சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டபோது வெங்கட்ராமன், ரமணா தம்பதியின் 15 வயது மகளும் ஆஞ்சநேயலுவும் காதலித்து வந்தது தெரியவந்தது.
எனவே போலீசார் வெங்கட்ராமன் மற்றும் ரமணாவை சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கடந்த (மே 13) ஆம் தேதி பெண் பார்த்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்த ஆஞ்சநேயலுவிற்கு போன் செய்த சிறுமி பெற்றோர் வீட்டில் இல்லை என கூறி, அவரை வீட்டிற்கு அழைத்ததாக சொல்லப்படுகிறது. எனவே ஆஞ்சநேயலு அன்றிரவு 10.30 மணியளவில் சிறுமியின் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் இருவரும் தனிமையில் இருந்ததாக சொல்லப்படும் நிலையில் அப்போது எதிர்பாராத விதமாக வீட்டிற்கு திரும்பிய சிறுமியின் பெற்றோரான வெங்கட்ராமன் மற்றும் ரமணா பார்க்க கூடாததை பார்த்து அதிர்ச்சியடைந்த இருக்கின்றனர்.
மகளை அந்த கோலத்தில் பார்த்ததால் ஆத்திரமடைந்த சிறுமியின் தந்தை வெங்கட்ராமன் அருகில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து ஆஞ்சநேயலுவை சரமாரியாக தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார். எனவே கொலையை மறைக்க நினைத்த வெங்கட்ராமன் ஆஞ்சநேயலுவின் உடலை பன்றி வெட்டும் கத்தியால் துண்டு துண்டாக வெட்டி அருகில் உள்ள 100 அடி ஆழ்துளை கிணற்றில் வீசியது தெரியவந்தது. எனவே வெங்கட்ராமன் மற்றும் அவரது மனைவி மகளை கைது செய்த போலீசார் ஆஞ்சநேயலுவின் உடலை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். வாலிபரை துண்டு துண்டாக வெட்டி ஆழ்துளை கிணற்றில் வீசிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.