Sulur missing girl case Sulur missing girl case
க்ரைம்

கடைக்குச் சென்ற 10 வயது பள்ளி சிறுமி சடலமாக கண்டெடுப்பு! "மர்ம நபரால் பைக்கில் ஏற்றி செல்லப்பட்ட சிறுமிக்கு நடந்த கொடூரம்"

காணாமல் போன அந்த சிறுமி தற்போது சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Vinvizhi Leninton

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த பள்ளபாளையம் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர், கடந்த வாரம் வரை போத்தனூர் பகுதியில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், சமீபத்தில்தான் இப்பகுதிக்குக் குடிபெயர்ந்துள்ளனர். குடும்பத்தலைவர் அப்பகுதியில் உள்ள லேத் ஒர்க்ஷாப் ஒன்றில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதிக்கு 10 வயதில் ஒரு மகள் இருந்துள்ளார். இவர்களது 10 வயது மகள், போத்தனூர் பகுதியில் உள்ள பள்ளியில் கடந்த ஆண்டு நான்காம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் அங்கிருந்து தங்கள் மகளின் மாற்றுச் சான்றிதழ் (TC) பெற்றோர் பெற்று வந்துள்ளனர். மேலும் தங்களின் மகளை இந்த ஆண்டு ஐந்தாம் வகுப்பில் சேர்ப்பதற்காகக் கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள பள்ளியில் சேர்க்க முடிவு செய்திருந்தனர்.

இந்நிலையில், நேற்று இரவு சுமார் 7 மணி அளவில் அச்சிறுமி அருகில் உள்ள கடைக்குச் சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் சிறுமி வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த பெற்றோர், சம்பந்தப்பட்ட கடைக்குச் சென்று விசாரித்துள்ளனர். அப்போது, சிறுமியை அடையாளம் தெரியாத ஒரு வாலிபர் தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றதாகக் கடை உரிமையாளர் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், பல இடங்களில் தேடி அலைந்துள்ளனர், ஆனால் சிறுமி கிடைவில்லை.

இதைத் தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர் சூலூர் காவல் நிலையத்தில் மகள் காணாமல் போனதாக புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி (CCTV) கேமரா காட்சிகளைத் தீவிரமாக ஆய்வு செய்துள்ளனர். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு நபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி மாணவி மர்ம நபர்களால் கடத்திச் செல்லப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், காணாமல் போன அந்த சிறுமி தற்போது சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று காணாமல் போன சிறுமி இன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.