சென்னை மாதவரத்தை சேர்ந்த 17 வயது கொண்ட விஜய் என்பவரை போலீசார் கைது செய்ததால் மனமுடைந்த அவர் தற்கொலைக்கு முயன்றதால் மகனுக்கு நீதி கேட்டு தாய் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாதவரம் பெரிய மாத்தூர் பகுதியை சேர்ந்த ராஜகோபால் - நாகராணி தம்பதியின் மகன் 17 வயது மதிக்கத்தக்க விஜய். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ராஜமங்கலம் போலிசாரால் பொய் வழக்கில் விஜய் கைது செய்யபட்டதாக கூறப்படுகிறது. கைது செய்த விஜயை 15 நாட்கள் போலிசார் காவலில் வைத்து பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஜாமீனில் வெளியே வந்த விஜய் கடந்த இரண்டு நாட்களாக தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டி நேற்று தற்கொலை முயற்சியிலும் ஈடுபடுள்ளார். தனது மகனின் நிலை கண்டு மனம் நொந்த 47 வயது மதிக்கதக்க நாகராணி தனது மகனுக்கு நியாயம் கிடைக்க வேண்டி தலைமை செயலகத்தின் வாயிலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார் இதனை கண்ட கோட்டை காவலர்கள் நாகராணியை உடனடியாக மீட்டு அருகில் உள்ள பி1 காவல்நிலையத்திற்கு அனுப்பி வைத்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். இதனால் தலைமை செயலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது