ராணிப்பேட்டையில் காதலியை பார்ப்பதற்கு அவரது வீட்டிற்கு சென்ற காதலன் மீது காதலியின் தாயார் சூடான எண்ணெயை ஊற்றி இருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த ஆயர்பாடி பகுதியை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் (19). இவர் காஞ்சிபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் கோகுலகிருஷ்ணன் காவேரிப்பாக்கம் பகுதியில் உள்ள சசிகுமார் என்பவரது மகளான நட்சத்திர (18) என்ற பெண்ணை காதலித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்றிரவு கோகுலகிருஷ்ணன் காதலி நட்சத்திராவை சந்திக்க அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது நட்சத்திராவின் அம்மா முகமது தமீம், “என் மகளிடம் பேசுவதை நிறுத்திக் கொள்” என கோகுல கிருஷ்ணனிடம் கோபமாக பேசியுள்ளார். நட்சத்திராவை திருமணம் செய்து கொடுக்குமாறு கேட்டுள்ளார். இதனால் ஒரு கட்டத்திற்கு மேல் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பெண்ணின் தாய் முகமது தமீம் வீட்டிற்குள் சென்று எண்ணெயை காய வைத்து கொண்டு வந்து கோகுல கிருஷ்ணன் முகத்தில் ஊற்றியதாக கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்து அலறி துடித்த கோகுல கிருஷ்ணனை அங்கிருந்தவர்கள் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அவரை இடமாற்றம் செய்துள்ளனர். கோகுல கிருஷ்ணனும் அந்த இளம்பெண்ணும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இரவு நேரத்தில் வந்து இவ்வாறு கேட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து காவேரிப்பாக்கம் காவல் துறையினர் நட்சத்திராவின் தாய் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்