tirupathur theft issue  
க்ரைம்

உறவினர் வீட்டில் நுழைந்து அத்துமீறிய கள்ளக்காதல் ஜோடி... குடும்பத்தார் கோவிலுக்கு சென்ற நேரத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானதாக...

Mahalakshmi Somasundaram

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த புதுப்பேட்டை ராகவேந்திரா நகர் கவிமணி காம்ப்ளக்ஸில் வசித்து வருபவர் 52 வயதுடைய மணிவண்ணன். இவரது மனைவி 47 வயதுடைய கவிதா. மணிவண்ணன் பைனான்ஸ் தோழி செய்து வரும் நிலையில் கடந்த (ஜூலை 18) ஆம் தேதி கணவன் மனைவி இருவரும் சாமி தரிசனம் செய்ய திருத்தணி கோவிலுக்குச் சென்றுள்ளனர். பின்னர் ஒரே நாளில் சாமி தரிசனம் முடித்துவிட்டு மறுநாள் காலை இருவரும் வீட்டிற்கு திரும்பியுள்ளனர். இந்த நிலையில், கடந்த (ஜூலை 25) ஆம் தேதி மணிவண்ணன் தனது மனைவியிடம் நிகழ்ச்சி ஒன்றுக்கு செல்ல மோதிரம் கேட்டுள்ளார்.

இதையடுத்து கவிதா பீரோவை திறந்து பார்த்தபோது, அதில் வைத்திருந்த 50 சவரன் தங்க நகைகள் காணாமல் போனது தெரியவந்தது. ஆனால் அதே பீரோவில் இருந்த ரூ.5 லட்சம் பணம் மற்றும் சுமார் ஒன்றரை கிலோ வெள்ளிப் பொருட்கள் மட்டும் அப்படியே இருந்துள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்த மணிவண்ணன், உடனடியாக நாட்றம்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், மணிவண்ணன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து கொள்ளையடித்த நபர்களை தேடி வந்தனர்.

போலீசாரின் விசாரணையில், மணிவண்ணனின் மனைவி கவிதாவின் உறவினரான மல்லப்பள்ளி பகுதியைச் சேர்ந்த வேலு என்பவற்றின் மனைவியான 36 வயதுடைய ஜோதி மற்றும் மூக்கனூர் அடுத்த கள்ளியூர் வட்டம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய மோகன் ஆகியோர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானதாக கூறப்படுகிறது. ஜோதி மற்றும் மோகன் இருவரும் மணிவண்ணனிடம் சீட்டு கட்டி வந்ததாகவும், அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, பின்னர் இருவரும் நெருக்கமாக பழகி வந்த நிலையில் அவர்களது பழக்கம் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி அடிக்கடி வெளியில் சுற்றி வந்தது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு மணிவண்ணனின் பீரோ சாவியின் ஒரு செட் காணாமல் போயுள்ளது. அந்த சாவி ஜோதிக்கு கிடைத்ததாகவும், இதனை பயன்படுத்தி பீரோவை திறந்து நகைகளை திருட இருவரும் திட்டமிட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன் படி மணிவண்ணனும் அவரது மனைவியும் திருத்தணி கோவிலுக்குச் சென்றிருந்ததை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஜோதி, தனது கள்ளக்காதலன் மோகனை வீட்டிற்கு வரவழைத்ததாக கூறப்படுகிறது.

பின்னர் இருவரும் சேர்ந்து மணிவண்ணன் வீட்டிற்குள் நுழைந்து, ஏற்கெனவே கிடைத்த பீரோ சாவியை பயன்படுத்தி பீரோவை திறந்து, அதில் இருந்த 50 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றதாக போலீசாரிடம் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். அவர்களிடம் இருந்து திருடப்பட்ட நகைகளில் 29 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள நகைகள் எங்கு பதுக்கி வைக்கப்பட்டுள்ளன என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சொந்த உறவினர் வீட்டில் இருந்த பீரோ சாவியை பயன்படுத்தி, தனது காதலனுடன் சேர்ந்து பெண் ஒருவர் 50 சவரன் நகைகளை திருடிய சம்பவம் நாட்றம்பள்ளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.