க்ரைம்

மகன் இறந்த துக்கத்திலிருந்து மீளாத தந்தை, தாய் தற்கொலை!! கோவையில் சோகம்

சூலூரில் மகன் இறந்த துக்கம் தாளாமல் பெற்றோர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil Selvi Selvakumar

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த கலங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சத்யராஜ் -சரண்யா தம்பதியினர்.இவர்களுக்கு 15வயதில் ஷ்யாம் என்ற மகன் இருந்தார். இவர் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். ஆசை ஆசையாக  வளர்த்து வந்த மகனை காலன் கொண்டு சென்று விட்டான் என கூறி பெற்றோர் கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளனர். 

இதனிடையே இன்று நீண்ட நேரமாகியும் இவர்களின் வீட்டு கதவு திறக்கப்படாதை அறிந்த அப்பகுதி மக்கள் சந்தேகமடைந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.அப்போது சத்யராஜ் தூக்கில் தொங்கிய நிலையிலும், சரண்யா அவரது காலுக்கு கீழ் சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து தகவலறிந்து வந்த சூலூர் காவல்துறையினர் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.