தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் மாணவி காயத்ரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவரது தாய் கடந்த சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் தனதாகி இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக சொல்லப்படுகிறது. எனவே சிறுமி தனது பாட்டியின் அரவணைப்பில் வசித்து பள்ளிக்கு சென்று வந்திருக்கிறார். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள ஆத்திக்காடு பகுதியை சேர்ந்த 19 வயதுடைய சஞ்சய், 21 வயதுடைய உபேஷ் தர்மா 18 வயதுடைய முத்தரசன் ஆகிய மூவருக்கும் தொழில் ரிதியாக சிறுமியின் தந்தையுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
மூவரும் பெயிண்டராக பணிபுரிந்து வருவதாக சொல்லப்படும் நிலையில் அடிக்கடி சிறுமியின் தந்தையை பார்க்க அவரது வீட்டிற்கு சென்று வந்திருக்கின்றனர். அப்போது சிறுமிக்கு மூவருடன் பழக்கம் ஏற்பட்டு நட்பு ரீதியாக பேசி வந்திருக்கிறார். தொடர்ந்து பழகி வந்த நிலையில் சிறுமிக்கு சஞ்சய் மீது காதல் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. பின்னர் இருவரும் அடிக்கடி வெளியில் சந்தித்து பேசி பழகி வந்த நிலையில் நேற்று முன்தினம் மாணவியை சஞ்சய் ஆத்திக்காடு பகுதிக்கு அழைத்திருக்கிறார். அதனை தொடர்ந்து முத்தரசன் மாணவியின் வீட்டிற்கு சென்று அவரை ஆத்திக்காடு பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றதாக சொல்லப்படுகிறது.
பின்னர் மூவரும் சேர்ந்து மாணவியை ஆத்திக்காடு பகுதியில் உள்ள கருமேனி ஆற்றங்கரையோரம் உள்ள புதர்கள் நிறைந்த இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சென்ற பிறகு மாணவியிடம் மூவரும் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி அங்கிருந்து தப்பிக்க முயன்ற நிலையில், அவரது அலறல் சத்தம் மற்றும் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளை கவனித்த அப்பகுதி பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். பொதுமக்கள் வருவதை கண்ட மூவரும் அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சி செய்திருக்கின்றனர்.
ஆனால் அவர்களை மடக்கிப் பிடித்த அப்பகுதி மக்கள், உடனடியாக மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்திற்கு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் மூவரையும் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதற்கிடையில் சம்பவம் குறித்து தகவலறிந்த மாணவியின் பெற்றோர், சாத்தான்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சகாய சாந்தி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மாணவியை காதலிப்பதாக கூறி தனிமையான பகுதிக்கு அழைத்துச் சென்றதும், பின்னர் நண்பர்களுடன் சேர்ந்து தவறாக நடக்க முயன்றதும் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து மாணவி சிறுமி என்பதால், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் சஞ்சய், உபேஷ் தர்மா மற்றும் முத்தரசன் ஆகிய மூவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். காதல் என்ற பெயரில் பள்ளி மாணவியை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று தவறாக நடக்க முயன்றதாக கூறப்படும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.