விசாரணைக்கு அழைத்துச் சென்றவரை துன்புறுத்தி, மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல்துறையினருக்கு 4 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலியைச் சேர்ந்த சந்திரா என்பவரின் மளிகைக் கடைக்குள் கடந்த 2019ம் ஆண்டு அத்துமீறி நுழைந்த திருநெல்வேலி டவுன் காவல் நிலைய காவலர் மகாராஜன் மற்றும் உதவி ஆய்வாளர் விமலன் ஆகியோர், அங்கு அவரது மகன் பேச்சிவேலை தேடினர். அவர் கிடைக்காத ஆத்திரத்தில் கடையில் உள்ள பொருட்களை உடைத்து, சேதப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து திருநெல்வேலி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்ததால் ஆத்திரமடைந்த காவலர்கள், பேச்சிவேலை பிடித்து சட்டவிரோதமாக இரண்டு நாட்கள் காவல் நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர்.
பின்னர், மருத்துவமனையில் சேர்த்து சிறையில் அடைத்துள்ளனர். அதனால், விசாரணை என்ற பெயரில் மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சந்திரா, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்தார்.
புகாரை விசாரித்த ஆணைய உறுப்பினர் வி. கண்ணதாசன், பேச்சிவேலுவின் கை-கால்களை கட்டியதோடு, காலில் சிலிண்டரை தொங்கவிட்டு கொடுமை படுத்தியுள்ளது நிரூபணமாகியுள்ளதாகக் கூறி,
விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் தாக்கியதால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இழப்பீட்டு தொகையை உதவி ஆய்வாளர் விமலன் மற்றும் காவலர் மகாராஜனிடம் இருந்து தலா 2 லட்சம் ரூபாய் வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.