திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கச்சனம் என்னுமிடத்தில், கடந்த 4ஆம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்ட மதுவிலக்கு போலீசார், அவ்வழியாக வந்த இருவரை சோதனை செய்தனர். அதில் இருவரும் உடலில் டேப் ஒட்டி, 48 மதுபாட்டில்கள் கடத்தி சென்றது தெரிய வந்தது. இதை அங்கிருந்த பொதுமக்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
இந்த நிலையில் மதுபாட்டில்களை கடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாமல், போலீசார் விடுவித்தது தெரியவந்தது. இதனையடுத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில், திருத்துறைப்பூண்டி மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் ஞானசுந்தரி, உதவி ஆய்வாளர் வரலட்சுமி உள்ளிட்ட ஒரே காவல் நிலையத்தைச் சேர்ந்த 6 போலீசாரை பணியிடை நீக்கம் செய்து, தஞ்சை சரக டிஐஜி பர்வேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.