திருவள்ளூர் மாவட்டம் புழல் அடுத்த காவாங்கரை சந்திப்பு அருகே, மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளம் பெண்கள் சாலையில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவாங்கரை பகுதியில் நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவருடன் இரண்டு பெண்கள் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, மதுபோதையில் இருந்த அவர்கள் சென்ற வாகனம் மற்றொரு வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. விபத்து ஏற்பட்டதும் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதையடுத்து, போதையில் இருந்த இரண்டு பெண்களும் நடுரோட்டில் நின்று கொண்டு அவ்வழியாக சென்ற பொதுமக்களிடம் தகராறில்ஈடுபட்டுள்ளனர். . மேலும், அவர்களை தட்டிக்கேட்ட போக்குவரத்து போலீசாரையும் “நீ என்னடா போலீஸ்” என காது கொடுத்து கேட்க முடியாத அளவுக்கு அவதூறாக பேசியதுடன், ஆபாச வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன், வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதனிடையே, அங்கு திரண்ட பொதுமக்கள் தங்களது செல்போன்களில் பெண்களின் ரகளையை வீடியோவாக பதிவு செய்தனர்.
இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புழல் காவல் நிலைய போலீசார், சாலையில் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இரு பெண்களையும் கட்டுப்படுத்தி காவல் வாகனத்தில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர், அவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இருவரும் அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது.
மேலும் ரகளை செய்த இரு பெண்களில் ஒருவருக்கு 19 வயதும், மற்றொரு பெண்ணுக்கு 17 வயதும் இருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து, விபத்து மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திய விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நடுரோட்டில் மதுபோதையில் இரண்டு இளம் பெண்கள் ரகளையில் ஈடுபட்டு, பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையூறு ஏற்படுத்திய சம்பவம் காவாங்கரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்