க்ரைம்

பிரபல ரவுடி சத்யாவிற்கு நேர்ந்த விபரீதம்...பழிக்கு பழி வாங்கிய மர்ம கும்பல்!

Tamil Selvi Selvakumar

சென்னை எழும்பூரில் மாண்டியத் சாலையில் ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில், 4 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை எழும்பூர் அருகே, புழல் பகுதியை சேர்ந்த ரவுடி சத்யாவை,  5 பேர் கொண்ட மர்ம கும்பல் இருசக்கர வாகனத்தில் வந்து நேற்று இரவு வெட்டி கொலை செய்துள்ளது. இதில் சத்யா சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எழும்பூர் போலீசார், சத்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில், கடந்த 2020ல் நடந்த புளியந்தோப்பை சேர்ந்த ரவுடி நாய் ரமேஷ், கொலைக்கு பழிக்கு பழி வாங்கும் விதமாக இந்த கொலை சம்பவம் நடந்திருப்பதாக தெரியவந்துள்ளது. ஏற்கனவே கொலை செய்யப்பட்ட நாய் ரமேஷின் உடன்பிறந்தவர்கள் மொத்தம் ஆறு சகோதரர்கள். எனவே, நாய் ரமேஷ் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை அவரது சகோதரர்கள் தேடி தேடி கொலை செய்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் ஏற்கனவே, சுப்ரியா என்ற பெண் உள்பட இரண்டு பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், சத்யா மூன்றாவதாக கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில், ரவுடி சத்யாவை கொலை செய்த கொலையாளிகளை, 4 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.