க்ரைம்

காதலனை துரத்திவிட்டு காதலியை சீரழித்த 3 பேர்! ஒரே நாளில் கைது.. ஆயுள் தண்டனை விதித்து அதிரடி காட்டிய நீதிமன்றம்!

அந்த பெண்ணையும் அவரின் காதலரையும் வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்...

Muthu Lakshmi

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த வருடம், பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மூன்று குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கடந்த 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் 8-ஆம் தேதி இரவு நேரத்தில் தெங்கால் பாலாற்றங்கரை அருகே அமைந்துள்ள அரசுக்கு சொந்தமான நவலாக் தென்னை பண்ணை பகுதியில் காதலர்கள் தனிமையில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மூன்று போ் கொண்ட கும்பல் மதுபோதையில், அந்த பெண்ணையும் அவரின் காதலரையும் வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்பு காதலனை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். பின்னர் இளம் பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி, கடத்தி சென்று சிறிது தூரம் கொண்டு சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதையடுத்து பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய A1 பார்த்திபன், A2 சிவராஜ் மற்றும் A3 ராஜா ஆகிய மூன்று பேரையும் போலீசார் சம்பவம் நடைபெற்ற அன்றே கைது செய்து, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். மேலும் குற்ற செயலில் ஈடுபட்ட மூன்று பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையடுத்து, வழக்கு ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் துரிதமாக விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இன்று செப்டம்பர் 2-ஆம் தேதி ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி திருமதி. தேன்மொழி அவர்கள், மூன்று பேரின் குற்றம் நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில் குற்றவாளிகளுக்கும் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். 

இதில், A1 பார்த்திபனுக்கு ஆயுள் தண்டனையுடன் 27 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. A2 சிவராஜ் மற்றும் A3 ராஜா ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையுடன் தலா 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், தலா ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் சிறப்பாக வாதாடி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்த முன்னாள் அரசு வழக்கறிஞர் திரு. சங்கர், தற்போதைய அரசு வழக்கறிஞர் திரு. டில்லி, வழக்கின் புலனாய்வு அதிகாரியான காவல் ஆய்வாளர் திருமதி. ஷாகின் மற்றும் நீதிமன்ற காவலர் WPC-308 திருமதி. ஐஸ்வர்யா ஆகியோரை ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பே. சிபின், இ.கா.ப., அவர்கள் வெகுவாக பாராட்டினார்.

துரிதமாகவும், சிறப்பாகவும் புலன் விசாரணை மேற்கொண்டு, நீதிமன்றத்தில் வழக்கை திறம்பட நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்த அரசு வழக்கறிஞர்கள், புலனாய்வு அதிகாரி மற்றும் நீதிமன்ற காவலருக்கு ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பில் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.