புகார் அளிக்க வந்த பெண்ணிடம் ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பழனி தாலுகா காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மீது அடுத்தடுத்து புதிய புகார்கள் வரிசையாக எழுந்துள்ளன. "உன்னிடம் கேட்காமல் யாரிடம் கேட்பது, புடவையுடன் புகைப்படம் அனுப்பு" என அவர் பெண்களிடம் அநாகரிகமாகப் பேசிய வாட்ஸ்அப் சாட்கள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வந்த ராஜகோபால், தன்னிடம் புகார் அளிக்க வந்த பெண்ணிற்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய புகாரில் நேற்று (24ம் தேதி) திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி சசிமோகனால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்.ஐ. ராஜகோபால் மீது அடுத்தடுத்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. காவல் நிலையத்திற்குத் தனது தனிப்பட்ட பிரச்சனைகளை குறித்துப் பாதுகாப்பு தேடி வரும் பெண்களிடம் அநாகரிகமாகப் பேசுவதையும், அவர்களிடம் எல்லை மீறி நடப்பதையும் ராஜகோபால் தொடர்கதையாக வைத்திருந்துள்ளார் என்பது தற்போது அம்பலமாகியுள்ளது. அதற்கு வலு சேர்க்கும் விதமாக, பாதிக்கப்பட்ட பெண்களிடம் அவர் வாட்ஸ்அப் மூலம் சாட்டிங் செய்த உரையாடல்கள் தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வாட்ஸ்அப் சாட்களில், "உனது புடவையுடன் கூடிய புகைப்படத்தை எனக்கு அனுப்பு" என்றும், அதற்கு அந்தப் பெண் மறுப்புத் தெரிவித்தபோது, "உன்னிடம் கேட்காமல் நான் வேறு யாரிடம் கேட்பது" என்றும் அநாகரிகமாக பேசிய விபரங்கள் ஆதாரத்துடன் வெளிவந்துள்ளன. பாதுகாப்பு கோரி வரும் பெண்களைத் தனது காம இச்சைக்கு இணங்க முயற்சி செய்த இந்த அதிகாரியின் முகத்திரை தற்போது வெட்ட வெளிச்சத்தில் கிழிந்துள்ளது. இந்த ஒரு பெண் மட்டுமல்லாமல், காவல் நிலையத்திற்குப் பல்வேறு புகார்கள் தொடர்பாக வந்த இன்னும் பல ஏழை, எளிய பெண்கள் இவரால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் காவலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
எனவே, துறையினருக்குக் களங்கம் விளைவித்த இந்த அதிகாரி மீது வெறும் சஸ்பெண்ட் நடவடிக்கை மட்டும் போதாது என்றும், துறை ரீதியான கடுமையான சட்டப் பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.