க்ரைம்

ஆடு என நினைத்து ஆளை வெட்டிய குடிகார ஆசாமியின் கொடூர செயல்!!

மதுபோதையில் ஆடு என்று நினைத்து ஆட்டை பிடித்துக்கொண்டிருந்த நபரின் தலையை வெட்டிய சம்பவம் ஆந்திராவில் அரங்கேறியுள்ளது.

Tamil Selvi Selvakumar

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி அருகேயுள்ள வலசப்பள்ளியில் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக  ஊர் எல்லையில் உள்ள எல்லாம்மா கோவிலுக்கு ஆடு, கோழி உள்ளிட்ட பிராணிகளை நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றுவது வழக்கம். இந்நிகழ்ச்சியில் கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கோவிலுக்கு ஆடு, கோழிகளை பலிகொடுத்து வருவர்.

இந்நிலையில் வழக்கம்போல் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் நடைபெற்ற இந்த பலிகொடுக்கும் நிகழ்ச்சியில் நேர்த்தி கடனுக்காக  வைக்கப்பட்டிருந்த  ஆடு ஒன்றை அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் பிடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது, ஆடுகளை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த சலபதி என்பவர்  மது அருந்திவிட்டு முழு போதையில் இருந்ததால்  ஆடு என்று நினைத்து ஆட்டை பிடித்துக்கொண்டிருந்த சுரேஷ் தலையை ஆடு வெட்டும் கத்தியால் ஓங்கி வெட்டியுள்ளார். இதனால் படுகாயம் அடைந்த சுரேஷ் ரத்த வெள்ளத்தில் சாய்ந்து துடித்துள்ளார்.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த கிராமமக்கள் உடனடியாக சுரேசை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு  சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக  உயிரிழந்தார். கழுத்தில் வெட்டுப்பட்டு உயிரிழந்த சுரேஷ்க்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் தவறுதலாக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.