க்ரைம்

அண்ணனை அடித்துக் கொலை செய்த தம்பி...! என்ன காரணம்...?

Malaimurasu Seithigal TV

ஈரோடு சூரம்பட்டி கஸ்தூரிபாய் வீதியின் ஒரு வீட்டில் விக்னேஷ் (29) மற்றும் இவரது தம்பி அருண்குமார்(25) வாடகைக்கு வசித்து  வந்தனர். இவர்கள்  இருவரும் கூலி வேலை செய்து வந்தனர். விக்னேஷ் - அருண்குமார் இருவரும் அவ்வப்போது ஒன்றாக அமர்ந்து மது அருந்துவது வழக்கம். அவ்வப்போது மது அருந்தும் போது அவர்களுக்கிடையே சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கம் என சொல்லப்படுகிறது.

அதைப்போல் நேற்று இரவும் வழக்கம்போல் விக்னேஷ், அருண்குமார் மது அருந்தி உள்ளனர். அப்போது அருண்குமார், விக்னேஷிடம் வீட்டு வாடகைக்கு பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் இது கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் அருண்குமார் தாக்கியதில் விக்னேஷுக்கு உடலின் பல பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அருண்குமார் போதையில் அங்கேயே படுத்து தூங்கிவிட்டார். 

இந்நிலையில் இன்று காலை அருண்குமாரின் நண்பர், அவரது வீட்டுக்கு வந்த போது விக்னேஷ் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதை அடுத்து அருண்குமார் போதை தெளிந்த உடன் அண்ணனை கொன்று விட்டோமே என அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவரே  சூரம்பட்டி காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

இதுகுறித்து டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை நடத்தினர். இதை அடுத்து விக்னேஷ் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அருண்குமாரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.