மகாராஷ்டிரா, நாசிக்கில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆறு ஊழியர்கள், அவர்களிடம் பணியாற்றி வரும் எட்டு பெண் ஊழியர்கள் மீது பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளனர். மேலும், இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் அது தொடர்பான குற்றச்சாட்டுகளைக் கூறியதைத் தொடர்ந்து, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டியுள்ளனர்.
கடந்த சில நாட்களாக நாசிக்கில் பாலியல் சுரண்டல் அதிகளவில் நடந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு, நாசிக்கில் தன்னைத்தானே ஜோதிடர் என்று கூறிக்கொள்ளும் அசோக் கராத், ஜோதிடம் பார்ப்பதாக கூறி பெண்களைப் பாலியல் ரீதியாகச் சுரண்டியது அம்பலமானது. தற்போது நாசிக்கில் உள்ள பெருநிறுவனத் துறையில் நடந்த இந்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாசிக்கில் உள்ள ஒரு புகழ்பெற்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்கள், தங்கள் மேலதிகாரிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள், வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதியளித்து அப்பெண்களை ஒரு வலையில் சிக்க வைத்துள்ளனர். வேலை வாங்கித் தந்ததும், "என்னால்தான் உங்களுக்கு இந்த வேலை கிடைத்தது, எங்களுக்கு நன்றி கடன் பட்டிருக்கிறீர்கள்" என்று கூறியுள்ளனர். கூறியதோடு மட்டுமின்றி அவர்களை பாலியல் ரீதியாக சுரண்டியும் உள்ளனர். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின்படி, அவர் விடுமுறைக்காக ஒரு ரிசார்ட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும், பணியிடங்களில் பெண்களின் அந்தரங்க உறுப்புகளைப் பார்த்தபடி ஆபாசமான சைகைகள் செய்யப்படுவது மற்றும் அவர்களின் மதம் குறித்து இழிவான கருத்துக்களைத் தெரிவிப்பது போன்ற சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இந்த விசாரணையில், அந்தப் பெண் மட்டுமல்லாமல், ஒரு இளம் ஊழியரை மதம் மாறக் கட்டாயப்படுத்தியதாக ஒரு அதிர்ச்சிகரமான சம்பவமும் தெரியவந்துள்ளது. மேலும், பாலியல் வன்கொடுமை வழக்கில் புகார் அளித்த ஒருவர் தனது புகாரில், குற்றம் சாட்டப்பட்டவர் திருமணமானவர் என்ற போதிலும், தன்னை திருமணம் செய்து கொள்வதாகப் பொய் சொல்லி தன்னை உடல் உறவுக்கு கட்டாயப்படுத்தியதாகக் கூறியதாக காவல்துறை தெரிவித்துள்ளது. திரிம்பக் சாலையில் உள்ள ஒரு இடத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபரால் தான் சீரான இடைவெளியில் பாலியல் ரீதியாக சுரண்டப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அந்த நபரின் வற்புறுத்தலின் பேரில், அவரது கூட்டாளியும் சேர்ந்து, புகார் அளித்தவரின் கள்ள உறவு பற்றி தனக்குத் தெரியும் என்று கூறி, தங்களது அலுவலகத்தின் வரவேற்பறை மற்றும் சமையலறையிலும் தன்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தத் தொடங்கியதாக புகார் அளித்தவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதனையடுத்து, நகர காவல்துறை இந்த வழக்கை மிகுந்த ரகசியத்துடன் விசாரித்தது. மார்ச் 25 அன்று தியோலாலி முகாமில் முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஏப்ரல் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் மும்பை நாக்கா காவல் நிலையத்தில் மேலும் எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கில் காவல்துறை இதுவரை ஆசிஃப் அன்சாரி, ஷஃபி ஷேக், ஷாருக்கான் குரேஷி, ரஸா மேமன் மற்றும் தௌசிஃப் அத்தார் ஆகிய ஐந்து சந்தேகத்திற்குரிய நபர்களைக் கைது செய்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களை ஏப்ரல் 10 வரை காவல்துறை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலைக்காக செய்யப்படும் நேர்காணல் அன்றே பெண்களைக் குறிவைப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த மோசடிக் கும்பலில் இன்னும் எத்தனை பேர் ஈடுபட்டுள்ளனர், எத்தனை பெண்கள் இந்தச் சுரண்டலுக்கு ஆளாகியுள்ளனர், என்பதைக் கண்டறிய மும்பை நாக்கா காவல்துறை முழுமையான விசாரணை நடத்தி வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.