திருப்பரங்குன்றம் அருகே நடந்த இரட்டை கொலை சம்பவத்தில் குற்றவாளிகள் 10 பேரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். குற்றவாளிகளுக்கிடையே “நீ பெரிய ஆளா, நான் பெரிய ஆளா!” என்ற மோதல் காரணமாக கொலை நடந்ததாக போலீசார் தகவல்.
மதுரை விமான நிலையம் பின்புறம் ஆஸ்டின்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சம்பக்குளம் விலக்கு அருகே கப்பலூர் - மதுரை சுற்றுச்சாலையில் நடுரோட்டில் கடந்த மே 3ம் தேதி அன்று முகம் சிதைந்து நிலையில் ஆணின் உடல் கிடந்தது அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடலில் வாகனம் ஏறி இறங்கிய தடயம் இருந்ததால் விபத்தாக இருக்கலாம் என சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அடுத்த சில மணி நேரத்தில் நிலையூர் - சம்பக்குளம் சாலையில் வண்ண பாறை அருகே கை கால் பின் தலை பகுதியில் கொடூரமாக வெட்டப்பட்ட இன்னொரு ஆண் உடல் கிடப்பதாக தகவல் வந்துள்ளது. பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஆஸ்டின்பட்டி போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றினர்.
முதலில் கண்டுபிடிக்கப்பட்ட உடலிலும் வெட்டுக்காயம் இருந்துள்ளது மேலும் இரண்டு உடல்களும் நான்கு கிலோ மீட்டர் இடைவெளியில் கிடந்ததால் இரட்டைக் கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகித்த போலீஸ். திருமங்கலம் ஏ எஸ் பி அன்சூல் நாகர் தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் குற்றவாளிகள் குறித்து தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
இந்த நிலையில் தான் பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய திருப்பரங்குன்றம் நிலையூர் பகுதியைச் சேர்ந்த சேதுபதி மற்றும் பாண்டிதுரை கூட்டாளிகள் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது போலீசாருக்கு தெரியவந்தது. அவர்களின் செல்போன் சிக்னலை வைத்து விசாரணை நடத்திய போலீசார், பதுங்கி இருந்த குற்றவாளிகளான நிலையூர் அழகு சுந்தரம் மகன் அழகு சேதுபதி (28), அதே பகுதியைச் சேர்ந்த சோனை முத்து மகன் வசந்த் (23), மற்றும் கிருஷ்ணமூர்த்தி மகன் கோடீஸ்வரன் (21), திருநகரைச் சேர்ந்த குழந்தை வேலு மகன் பாண்டிதுரை (27), நிலையூரை சேர்ந்த முத்துமாரி மகன் சங்கீத் (25), கூத்தியார் குண்டு பகுதியை சேர்ந்த முருகன் மகன் ராஜவேல் (26), டிவிஎஸ் நகர் பகுதியைச் சேர்ந்த சிவா மகன் விஷ்வா (24), திருப்புவனத்தை சேர்ந்த செல்லத்துரை மகன் கருப்பு ராஜா (18), நிலையூரை சேர்ந்த முருகன் மகன் தினேஷ் (25), முத்துப்பாண்டி மகன் கலையரசன் (24) உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கொலை செய்யப்பட்ட இருவர் வாடிப்பட்டியை சேர்ந்த மவுவன் (29) மற்றும் அவரது கூட்டாளி பத்மநாதன் (25) என தெரிந்தது. இதில் மவுவன் மீது வழிப்பறி, கொலை முயற்சி போன்ற வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் உள்ளது. கொலை செய்த சேதுபதி, பாண்டிதுரை கோஷ்டிக்கும் மவுதன் தரப்புக்கும் இடையே “நீ பெரிய ரவுடியா, நான் பெரிய ரவுடியா” என்ற போட்டி இருந்து வந்துள்ளது. கொலை நடப்பதற்கு சில நாட்கள் முன்பு இரண்டு கோஷ்டிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் சேதுபதி மவுதனுக்கு போன் மூலம் பேசி “சமரசம் செய்து கொள்ளலாம்” என்று வரவழைத்துள்ளார். அதையடுத்து மவுதனும் அவரது கூட்டாளி பத்மநாதனும் டூவீலரில் சம்பக்குளம் விளக்கு அருகே வந்துள்ளனர். இரு தரப்பும் பேசிக் கொண்டிருக்கும்போதே மறைந்திருந்த சேதுபதி கூட்டாளிகள் பயங்கர ஆயுதங்களுடன் பத்மநாதனை வெட்டத் தொடங்கியுள்ளனர். இதனைக் கண்டு டூவீலரில் மவுதன் அங்கிருந்து தப்பி உள்ளார். அந்த கும்பல் பத்மநாதனை கொடூரமாக வெட்டி நடுரோட்டில் போட்டுவிட்டு, மவுதனை விரட்டி அருகில் இருந்த வண்ண பாறை அருகே வைத்து கொடூரமாக வெட்டி சாய்த்ததாக போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் 10 பேரையும் ஆஸ்டின்பட்டி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். “நீ பெரிய ஆளா பெரிய ஆளா” என்ற சண்டையில் இரண்டு இளைஞர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.