திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் பாடி நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் 34 வயதுடைய அருண்குமார். இவர் மேற்கண்ட முகவரியில் வாடகை வீட்டில் கடந்த 12 வருடங்களாக வசித்து வருகிறார். கார் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் வியாசர்பாடி எஸ் ஏ காலனி எட்டாவது தெருவில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வரும்போது இரண்டு பேர் அருண்குமாரை வழி மடக்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் அவர்கள் மறைத்து வைத்திருந்த கட்டை மற்றும் கற்களால் சரமாரியாக அடித்தனர். இதில் அருண் குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்துள்ளார். அருண் குமாரை பார்த்த அப்பகுதி மக்கள் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சிகிச்சை பெற்று வந்த அருண் குமார் போன் மூலம் இதுகுறித்து எம்கேபி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மருத்துவமனைக்கு நேரில் சென்ற எம் கே பி நகர் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்து வியாசர்பாடி எஸ் ஏ காலனி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்கின்ற 22 வயதுடைய ராக்கி, 25 வயதுடைய அசோக் குமார் என்கின்ற தொப்பை அசோக. 25 வயதுடைய மணிகண்டன், மற்றும் 30 வயதுடைய வெங்கடேசன் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். இதில் போலீசாரிடமிருந்து தப்பித்து ஓடும்போது ராஜேஷ் என்பவருக்கு கீழே விழுந்ததில் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இவர்களிடம் விசாரணை நடத்தியதில் அடிபட்ட அருண்குமார் என்பவருக்கும் கைது செய்யப்பட்ட தொப்பை அசோக் என்பவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் முன் விரோதம் இருந்து வந்ததும் இதன் காரணமாக தொப்பை அசோக் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து அருண்குமாரை சரமாரியாக தாக்கியது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்த எம்கேபி நகர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.