க்ரைம்

புற்றுநோய் பாதித்த மகனை வி‌ஷ ஊசி போட்டு கொன்ற தந்தை உட்பட மூவர் கைது

சேலம் மாவட்டத்தில் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த மகனை விஷ ஊசி போட்டு கொன்ற வழக்கில், தந்தை உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Malaimurasu Seithigal TV

சேலம் மாவட்டத்தில் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த மகனை விஷ ஊசி போட்டு கொன்ற வழக்கில், தந்தை உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் கட்சுப்பள்ளி கிராமத்தில் பெரியசாமியின் 14 வயது மகன் வண்ணத்தமிழ், கடந்த ஓராண்டாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பெரிதும் அவதிப்பட்டு வந்துள்ளார். கடும் வேதனையில் துடித்து கொண்டிருந்த மகனை தினந்தோறும் பார்த்த தந்தை, மருத்துவ உதவியாளர் பிரபுவை வீட்டிற்கு வரவழைத்து ஊசி போட்டுள்ளார். அதன் பிறகு சிறிது நேரத்தில் வண்ணத்தமிழ் சுருண்டு விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது. இதனால், தந்தையே விஷ ஊசி போட்டு மகனை கொலை செய்ததாக புகார் எழுந்தது. அதன் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்ட கொங்கணாபுரம் போலீசார், வண்ணத்தமிழின் தந்தை பெரியசாமி, சிறுவனுக்கு ஊசி போட்ட மருத்துவ உதவியாளர் பிரபு மற்றும் ஊசி செலுத்த துணையாக இருந்த அதே பகுதியை சேர்ந்த விநாயகா லேப் நிர்வாகி வெங்கடேசன் ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளனர்.

லேப் நிர்வாகி வெங்கடேசனை சந்தித்த பெரியசாமி, புற்றுநோயால் கடும் சிரமப்பட்டு வரும் தமது மகனை கொன்றுவிட வழி உள்ளதா? என கேட்டபோது, வெங்டேசனின் அறிவுரைப்படி மருத்துவ உதவியாளர் பிரபு மூலமாக இடுப்பில் செலுத்த வேண்டிய ஊசியை, நரம்பு வழியாக செலுத்தி சிறுவனை உயிரிழக்க செய்ததாக  அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தந்தை பெரியசாமி உள்பட 3 பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து, மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.