கமலக்கண்ணன் (36) திருப்பத்தூர் மாவட்டம், தில்லை நகர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரனின் மகன் இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி உள்ளது. ஆனால் அந்த பெண்ணிடம் பணம் இல்லாத காரணத்தினால் அவரை விட்டு விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருப்பத்தூர் - கிருஷ்ணகிரி சாலையில் உள்ள பிரபல துணிக்கடையில் வேலை செய்து வந்த கமலகண்ணன் அங்கு கணவனை இழந்த பெண் ஒருவரிடம் நெருங்கி பழகி வந்துள்ளார்.
மேலும், அந்த பெண்ணிடம் "எனக்கு கார் ஓட்ட தெரியும்; நீ முதலாளி நான் தொழிலாளி" என்று கூறி அந்த பெண் சிறுக சிறுக சேர்த்து வைத்து இருந்த நகை மற்றும் பணத்தை வைத்து கார் வாங்கி உள்ளார். அந்த காரில் இருவரும் வலம் வந்துள்ளனர். மேலும், அந்த பெண்ணிடம் திருமண ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக சுற்றி வந்துள்ளார். அந்த பெண்ணிடம் இருந்த பணம் காலி என்று அறிந்த அடுத்த நொடியே காரை எடுத்து சென்று அடமானம் வைத்து விட்டு ஓட்டம் பிடித்துள்ளார். இதனால் மனம் உடைந்த அந்த பெண் தற்கொலை முயற்சி செய்ததால் காவல்துறை விசாரணை செய்து கமலக்கண்ணன் மீது 420 உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
பின்னர், சிறையில் இருந்து வெளியே வந்த கமலக்கண்ணன் கடந்த 2021-ம் ஆண்டு தனது நண்பனின் மனைவி வைஷாலியின் (30) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தாயாருக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. அதனால், அவரை மருத்துவமனையில் சேர்க்க கார் டிரைவராக சென்ற கமலக்கண்ணன் நல்லவன் போல நடித்துவந்துள்ளார். மாதம் மாதம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதால் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்துள்ளார். இந்நிலையில் இது பல மாதங்கள் கடந்த நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே பிரிவினையை கூட கமலக்கண்ணன் உண்டு பண்ணி உள்ளார்.
வைஷாலி, அவரது கணவன் பிரிந்த பிறகு "நான் இருக்கிறேன் நீ கவலை படாதே" என்று ஆறுதல் கூறி "எனக்கும் மனைவி இல்லை, உனக்கும் கணவன் இல்லை நாம் இருவரும் சேர்ந்து வாழலாம்" என வாய்க்கு வந்ததை கூறியுள்ளார். அப்போது வைஷாலியின் தாயாரை ஓசூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவரது தாயின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு எங்கோ தொலைந்து விட்டது என்று நாடகம் ஆடி உள்ளார். வைஷாலியும் 'வருங்கால கணவன் தானே' என்று நம்பி தனது குடும்பத்தாரிடம் "நான்தான் செலவிற்கு அடகு வைத்து உள்ளேன்" என்று கூறி கமலக்கண்ணனை அவரது குடும்பத்தாரிடமிருந்து காப்பாற்றி உள்ளார்.
அங்கு ஆரம்பித்துள்ளது முதல் திருட்டு. அதன் பிறகு சில மாதங்கள் கழித்து வைஷாலியின் தாயார் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் உயிரிழந்துள்ளார். அதன் பிறகு வைஷாலியின் தாயார் வைத்திருந்த நகைகள் மற்றும் சொத்துக்களை தனது தம்பிக்கும் வைஷாலிக்கும் சரிபாகமாக பிரித்துள்ளனர். தாயாருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் ஏற்கனவே பல லட்சங்கள் வாங்கிய கடனை அடைத்து விடலாம் என்று எண்ணி, வீட்டை விற்பனை செய்து பணத்தில் கடனையும் அடைத்து மீதமுள்ள பணத்தை ஃபிக்சட் டெபாசிட் செய்துள்ளனர். இதனை எல்லாம் கூடவே இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கமலக்கண்ணன் வைஷாலிக்கு ஒரே ஒரு பெண் பிள்ளை உள்ளதால் "நாம் பிள்ளையை அழைத்துக் கொண்டு சிங்கப்பூர் சென்றுவிடலாம். அங்கு சென்று நல்ல படியாக வாழலாம்" என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
அதற்கு முதலில் பாஸ்போர்ட் எடுக்க வேண்டும் என்று பல லட்சங்களை வைஷாலி இடமிருந்து வாங்கி இருக்கிறார். பிறகு சிங்கப்பூர் செல்ல ஆறு லட்ச ரூபாய் பணம் கட்ட வேண்டும் என்று இருந்த நகைகளை எல்லாம் அடகு வைத்து பணம் கொடுக்குமாறு கேட்டு பணத்தைப் பெற்று ஓட்டம் பிடித்துள்ளார் கமலக்கண்ணன். அவ்வப்போது சிங்கப்பூரில் வேலை செய்வது போல நடித்து உல்லாசமாக ஊர் சுற்றி உள்ளார். ஒரு கட்டத்தில் "கமலக்கண்ணன் சிங்கப்பூர் செல்லவில்லை; நம்மிடம் பொய் சொல்லி உள்ளார்" என்று அறிந்த வைஷாலி இது குறித்து கேள்வி எழுப்பியதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆட்டம் காட்டி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வைஷாலி மோசடி மன்னன் கமலக்கண்ணன் மீது திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் திருப்பத்தூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து கமலக்கண்ணன் மீது 420 மற்றும் நம்பிக்கை துரோகம் செய்வது என இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும், சிறைக்கு அழைத்து சென்ற போது சிரித்தபடியே செய்தியாளர்களுக்கு டாடா காட்டி சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கணவன் இல்லாத பெண்களை குறி வைத்து ஏமாற்றும் ஏமாற்று பேர்வழிகள் நாட்டில் நடமாடி வருவதால் பெண்கள் உஷாராக இருக்க வேண்டும் என்ற கோரிக்கை எடுத்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.