இளையான்குடி அருகே கார் ஒட்டி வரும்போது ஏற்பட்ட தகராறில் டிராவல்ஸ் உரிமையாளர் வெட்டிக்கொலை. கொலையை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே வாகனம் ஓட்டி வந்ததில் ஏற்பட்ட தகராறில் டிராவல்ஸ் உரிமையாளர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு
இளையான்குடி அருகே உள்ள கண்ணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் 29 வயதான சங்கர். இவர் சொந்தமாக ஆட்டோ மற்றும் கார் வைத்து டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் நேற்று இரவு தனது காரில் வெளியே சென்று விட்டு தாயமங்கலம் வழியாக சொந்த ஊர் திரும்பியுள்ளார். தாயமங்கலம் அருகே வரும்போது எதிரே வந்த நபர் மீது கார் மோதுவது போல சென்றதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து கிராமத்துக்கு திரும்பிய அவரை அது சம்பந்தமாக பேசுவதற்காக தாயமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த முத்துவேல், செல்வகுமார் ஆகியோர் தாயமங்கலம் அழைத்துச் சென்றுள்ளனர். பேச்சுவார்த்தையின்போது இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது சங்கரை அந்த கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சராமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதில் சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய கோரி உறவினர்கள் இளையான்குடியில் கண்மாய் கரை அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இளையான்குடி ,பரமக்குடி இளையான்குடி சிவகங்கை ஆகிய பகுதியில் இருந்து போக்குவரத்து கடும் பாதிப்படைந்துள்ளது. அவர்களிடம் இளையான்குடி காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.