தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அடுத்த புத்தன்தருவை பகுதியில் உள்ள வேதக் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மெட்டில்டா. இவர் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 56 வயதுடைய ஜேம்ஸ் சித்தர் என்பவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். ஜேம்ஸுக்கும் அவரது பக்கத்துக்கு வீட்டுக்காரர் ஜேக்கப் என்பவருக்கும் இடையே நில தகராறு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் இன்று மாலையில் ஜேம்ஸ் சித்தர் தனது சொந்த ஊரான சாத்தான்குளம் அருகே உள்ள திருப்பணி புத்தன்தருவை கிராமத்திற்கு சென்றிருக்கிறார். பின்னர் அங்கு தனது வீட்டில் வசித்து வரும் தாயாரை சந்தித்து விட்டு மீண்டும் வீடு திரும்பிய போது ஜேக்கப் என்பவர் ஜேம்ஸ் சித்தரை வழிமறித்து நில தகராறு தொடர்பாக பேசியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த ஜேக்கப் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஜேம்ஸ் சித்தரை சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில் ஜேம்ஸ் சித்தருக்கு தோள்பட்டை, கால்,தொடை போன்ற இடங்களில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஜேக்கப் அங்கிருந்து தப்பியோடினார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக ஜேம்ஸ் சித்தரை மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில் தனது கணவர் வெட்டுப்பட்டது குறித்து தகவல் அறிந்து சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு வந்த அவரின் மனைவியான காவல் உதவி ஆய்வாளர் மெட்டில்டா தனது கணவர் உடலை கண்டு கதறி அழுதார். முதற்கட்ட விசாரணையில் நிலத்திற்கு வேலி அமைத்ததில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின் கணவர் நிலத்தகராறு தொடர்பாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.