க்ரைம்

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பெரியப்பா..! அதிரடியாக போக்சோவில் கைது செய்த போலீசார்..!

Malaimurasu Seithigal TV

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் ரகுநாதன் (46). இவரது மனைவியின் தங்கை மற்றும் அவரின் கணவர் இருவரும் சில வருடங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் காலமாகினர். மேலும் பெற்றோர்கள் இருவரும் இறந்த நிலையில் ஆதரவில்லாமல் இருந்த தன்னுடைய தங்கை மகளை ரகுநாதனின் மனைவி தனது பராமரிபில் வளர்த்து வந்தார். மேலும், சிறுமியை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளியின் விடுதியில் சேர்த்து படிக்க வைத்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்தாண்டு கொரோனா தொற்று காரணமாக பள்ளி மற்றும் விடுதிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் சிறுமி பெரியம்மா வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார்.

இதனை தொடர்ந்து, திருச்செந்தூர் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்த ரகுநாதன் சொந்த ஊர் வந்துள்ளார். அப்போது தனது மனைவி கூலி வேலைக்கு சென்ற நிலையில், அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி வீட்டில் தனியாக இருந்த சிறுமியை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார் ரகுநாதன். பின்னர்  சில மாதங்களில் சிறுமி கர்ப்பமடைந்தார்.

மேலும் நடந்த சம்பவங்களை சிறுமி தனது பெரியம்மாவிடம் கூறிய நிலையில், அவர் சாயல்குடி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் ரகுநாதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், ரகுநாதனை தேடி அவரின் வீட்டிற்கு சென்றபோது அவர் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவானார்.

பின்னர், தப்பியோடிய ரகுநாதனை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் பலமுறை போலீசாரின் வலையில் சிக்காமல் தப்பியுள்ளார். இதனை தொடர்ந்து சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் ரகுநாதனின் செல்போன் சிக்னல் மூலம் அவர் தூத்துக்குடி பகுதியில் தங்கியிருக்கும் இருப்பிடத்தை போலீசார் கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து இரவோடு இரவாக தூத்துக்குடி விரைந்த காவல்துறையினர், பேருந்து நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் தங்கியிருந்த ரகுநாதனை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.